இலங்கையில் போர் நிறுத்தத்தை நாம் அமலாக்க முடியாது-பிரணாப்
கொல்கத்தா: இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளில் முதல்வர் கருணாநிதி திருப்தி கொண்டுள்ளார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களிடம் பிரணாப் முகர்ஜி பேசுகையில், இலங்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த முயற்சிகளில் முதல்வர் கருணாநிதி திருப்தி அடைந்துள்ளார்.
இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீரிதியிலான தீர்வு மட்டுமே சாத்தியமாகும். இதில் இந்தியா ஆழ்ந்த நம்பிக்ைக கொண்டுள்ளது.
அதேபோல தமிழக மீனவர்களின் நலன்களைக் காப்பதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி விட்டால் இனிமேல் இலங்கை கடற்பைட அவர்களை சுடாது என்றார் அவர்.
கருணாநிதியுடன் சந்திப்பு
முன்னதாக நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேசினார்.
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் தம்பி பாஸில் ராஜபக்சே நேற்று முன்தினம் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது தமிழர்களின் உயிர் இழப்புகள் தவிர்க்கப்படும் என இலங்கை உறுதியளித்தது.
மேலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு இந்திய மருத்துவ உதவி கிடைக்கவும் அனுமதிக்கப்படும் என இலங்கை தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பையடுத்து பிரணாப் முகர்ஜி உடனே சென்னை கிளம்பினார். நேற்று முன்தினம் இரவு அவர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து இலங்கை தரப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை குறித்து விளக்கினார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த சந்திப்பின்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சந்திப்புக்குப் பின்னர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் நார்வே நாட்டின் முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் அமல் செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வலியுறுத்தினார்.
இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ தீர்வு காண முடியாது என்பதை நான் அவரிடம் வலியுறுத்தினேன். இந்தப் பிரச்சினையில் இந்தியாவின் நிலை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
போர் நிறுத்தத்தை பொறுத்தமட்டில் நாம் அதை அமல்படுத்த முடியாது. இலங்கையிடம் போரை நிறுத்துமாறு நாம் கூற முடியாது. அப்படிக் கூறினால் அது அவர்களது உள்விவகாரத்தில் தலையிடுவதாகும். நார்வே உதவியுடன்தான் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும்.
இலங்கையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று உயர் மட்டக் குழு கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட முடிவை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்.
800 டன் நிவாரணப் பொருட்கள்
போரினால் பாதிக்கப்பட்டுள்ள 2 லட்சம் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகள் மூலம் வழங்குவதாக இலங்கை உறுதியளித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவ இந்திய அரசு 800 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கும். இதற்கும் இலங்கை அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசும் நிவாரணப் பொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு அனுப்பி வைக்கும்.
இந்திய அரசின் நிவாரணப் பொருட்களை தூதர்கள் மூலம் இலங்கையில், வட பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனுப்பி வைக்க இலங்கை அரசு தேவையான ஏற்பாடுகளையும் உதவிகளையும் செய்யும்.
ராணுவ உதவி இல்லை
இந்தியா எந்த ராணுவ உதவியையும்இலங்கைக்கு செய்யவில்லை. தளவாடங்களைத் தரவில்லை, விற்பனை செய்யவில்லை. இந்திய எல்லையைப் பாதுகாக்கும் வகையில் ராடார் உபகரணங்களை மட்டும் கொடுத்துள்ளோம்.
இந்தியாவிலிருந்து எந்த ராணுவ வீரரும் இலங்கை ராணுவத்திற்கு உதவியாக அனுப்பப்படவில்லை. இந்தியாவில் ராணுவப் பயிற்சிக் கல்லூரி உள்ளது. உலகில் உள்ளஎல்லா நாட்டைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து பயிற்சி பெறுகிறார்கள். அதேபோல இந்திய ராணுவ அதிகாரிகளும் மற்ற நாடுகளில் உள்ள பயிற்சிக் கல்லூரிகளுக்கு சென்று பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
மீனவர்கள் மீது இனி தாக்குதல் இருக்காது
இலங்கை அரசின் சிறப்பு தூதர் பாஸில் ராஜபக்சேவுடன் இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது குறித்து பேசினேன். இதுகுறித்து இந்தியாவும், இலங்கையும் ஒப்புக் கொண்டுள்ளநடைமுறைக்கு சாத்தியமான 2005ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
அதன்படி இந்திய படகுகள் செல்லும்போது மீனவர்களை சுட்டுக்கொல்லக் கூடாது என்றும் சோதனை செய்து மீனவர்களிடம் முறையாக பதிவு செய்த அடையாள அட்டை இருக்கிறதா என்று பார்த்து திருப்பி அனுப்பி விட வேண்டும் என்றும் போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.
இலங்கை பிரச்சினை இங்கு அரசியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து எந்தக் கருத்தும் நான் சொல்வதற்கில்லை. இலங்கைத் தமிழர் நலன் குறித்து பேச மட்டுமே நான் வந்தேன் என்றார் பிரணாப் முகர்ஜி.












Click it and Unblock the Notifications