சிக்குன் குனியா-மலேரியா: அரசு முன்னெச்சரிக்கை
சென்னை: வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, மலேரியா, டெங்கு, சிக்குன் குன்யா, லெப்டோபைரோசிஸ் போன்ற நோய்கள் பரவலைத் தடுக்க அரசு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் விஷக் காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 70 குழந்தைகள் காய்ச்சல் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் நோய்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொது சுகாதார துறை இயக்கத்தில் உள்ள உயர் அலுவலர்கள் அனைவருக்கும் மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டு, அங்கு சென்று நோய் தடுப்பு பணிகளை மேற்பார்வையிட உத்தரவிடப்பட்டுள்ளது.
பரவலாக மழை பெய்து வருவதால், குடிநீர் நிலைகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதனால் தண்ணீர் மூலம் பரவக்கூடிய தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களும், கொசு மூலம் பரவக்கூடிய மலேரியா, டெங்கு, சிக்குன் குன்யா, லெப்டோபைரோசிஸ் போன்ற நோய்கள் திடீரெனப் பரவும் அபாயம் உள்ளது.
எனவே மக்கள் அனைவரும் சில தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நன்கு காய்ச்சிய நீரைக் குடிக்க வேண்டும். உடைந்த குடிநீர் குழாய்களில் அல்லது குழி தோண்டி தண்ணீர் பிடிப்பதை தவிர்க்கவும். குடிநீர் குழாய்களை நீர் வராதபோது நன்கு மூடிவைக்கவும்.
சுகாதாரமற்ற சூழ்நிலையில் விற்கும் உணவுப் பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை வாங்கி உண்பதைத் தவிர்க்கவும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவும்.
தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உப்பு கரைசல் நீரை (ஓ.ஆர்.எஸ்) பருகவும்.
குடிநீர் நிலைகளுக்கு குளோரினேசன் செய்ய வரும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். வீட்டைச் சுற்றிலும் நீர் தேங்கினால் கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளது. எனவே அதைத் தவிர்க்கவும்.
காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் அது மலேரியா/ டெங்கு மற்றும் சிக்குன் குனியா என்று தெரிந்து கொள்ள அருகிலுள்ள சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளவும். மேற்படி நோய் இருந்தால், அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறவும்.
உள்ளாட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி ஊராட்சிகளால் குடிநீர் பாதுகாப்பு, தொற்றுநோய் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கிராம சுகாதார குழுவுக்கு சுகாதாரத்தை பராமரிக்க ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.12 கோடி வரை நிதி தரப்பட்டுள்ளது.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் தேவையான எல்லா மருந்துகளும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. அரசு ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.