காஞ்சிபுரத்தில் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்!
சென்னை: பாலாறு மற்றும் குசஸ்தலை ஆறுகளில் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தி அதிமுக இன்று காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா இதுகுறித்து நேற்று வெளியிட்ட அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாறு, குசஸ்தலை ஆறுகளில் விதிமுறைகளை மீறி திமுகவினர் மணல் எடுப்பதால், பெரும்பாக்கம், மேல் கதிர்பூர் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட மணல், லாரிகள் மூலம் செவிலிமேடு, வந்தவாசி, ஓரிக்கை, வாலாஜாபாத், தென்னேரி, சுங்குவார்சத்திரம் ஆகிய சாலைகள், வேலஞ்சேரி, தாழவேரி, பூணிமாங்காடு, அருங்குளம், நெமிலி ஆகிய சாலைகள் வழியாக தினமும் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால், இந்த சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாகி, இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், பள்ளிப்பட்டு, திருத்தணி ஆகிய பகுதிகளில் அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக, மாணவ, மாணவியர், விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகி உள்ளது.
அண்ணா நூற்றாண்டு விழாவையட்டி, காஞ்சிபுரம் காமராஜர் நகரில் அமைக்கப்பட்ட அதிமுக கல்வெட்டை காவல்துறை உதவியுடன் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர். இதைத் தட்டிக் கேட்ட காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அச்சுறுத்தப்பட்டதோடு, 4 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இப்படி பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் திமுக அரசைக் கண்டிக்கிறேன்.
மணல் கொள்ளை, சாலைகளைச் சீரமைக்காதது, மின்வெட்டு, கல்வெட்டை இடித்தது, பொய் வழக்கு போட்டது ஆகியவற்றைக் கண்டித்து, அதிமுக சார்பில் 4-ம் தேதி (இன்று, புதன் கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில், அமைப்புச் செயலாளர் செம்மலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.












Click it and Unblock the Notifications