கைதிகளுக்கு விருந்து வைத்த போலீசார்!
ஈரோடு: ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகிகளுக்கு விருந்து வைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு எஸ்பி பரிந்துரை செய்துள்ளார்.
பெருந்துறையைச் சேர்ந்த பழனிசாமியை சொத்துக்காக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவின் ஆதரவாளர்கள் கடத்தி சித்தரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந் நிலையில் திமுகவைச் சேர்ந்த கோபிநாத், பவானி ரெங்கசாமி, பத்திர எழுத்தர் கருணாகரன், ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை வழக்கு விசாரணைக்கா நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று திரும்பும் வழியில் இவர்களுக்கு ஆயுதப்படை எஸ்.ஐ. ஜார்ஜ் வில்லியம்ஸ் தலைமையிலான போலீசார் செங்கப்பள்ளி அருகே ஒரு ஹோட்டலில் விருந்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்த சிபிசிஐடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரடி ஆய்வில் ஈடுபட்டதோடு இது குறித்து ஈரோடு எஸ்பிக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கைதிகளுக்கு விருந்து வைத்த எஸ்ஐ மற்றும் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு டிஐஜிக்கு ஈரோடு எஸ்பி பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
'வசூல்' கமிட்டியில் 'கடத்தல்' ராஜா:
இதற்கிடையே கோவை மண்டல திமுக மாநாட்டுக்கான நிதி வசூல் கமிட்டியில், ஆள் கடத்தல் வழக்கில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்த என்.கே.கே.பி. ராஜா சேர்க்கப்பட்டுள்ளார்.
கோவையில் நவம்பர் 16ல், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்ட மண்டல மாநாடு நடக்கிறது. மாநாட்டில் முதல்வர் கருணாநிதி, கட்சி முன்னணி தலைவர்கள், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
மாநாட்டை சிறப்பாக நடத்தவும், தேர்தல் நிதி வழங்கவும், முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று மாவட்ட அமைச்சர் மற்றும் நிர்வாகிகள் கொண்ட நிதிக் கமிட்டி உட்பட பல கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டுக்கு நிதி திரட்டும் கமிட்டி அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சாமிநாதன், கதர்துறை அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளார்.
நிதி வசூல் கமிட்டியில் ராஜா சேர்க்கப்பட்டுள்ளது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாநாட்டில், நாடாளுமன்ற தேர்தல் நிதியாக மூன்று மாவட்டங்களையும் சேர்த்து ஐந்து கோடி ரூபாய் வழங்க முடிவாகியுள்ளதாம்.












Click it and Unblock the Notifications