5 வயது மகளின் உடல் உறுப்புகள் தானம் செய்த பெற்றோர்
திருச்சி: மூளை மரணத்தைச் சந்தித்த தங்களது ஐந்து வயது மகளின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானமாக அளித்தது அனைவரும் நெகிழ வைத்துள்ளது.
திருச்சி அருகே உள்ள சமயபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பூங்கொடி. இவர்களது ஐந்து வயது மகள் சுபாநந்தினி.
சுபா நந்தினிக்கு 'infiltrative brain stem glioma' என்ற அரிய வகை நோய் வந்தது. இதையடுத்து திருச்சியில் உள்ள ஏசிபி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஏழு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த சுபாநந்தினிக்கு மூளை செயலிழந்தது.
இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கினால் மற்றவர்களுக்குப் பயன்படும் என டாக்டர்கள், சுபாநந்தினியின் பெற்றோரிடம் எடுத்துரைத்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட பெற்றோர்கள், 3 நாட்களுக்கு முன்பு மூளை மரணத்தைச் சந்தித்துள்ள தங்களது மகளின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டனர்.
இதையடுத்து சுபா நந்தினியின் கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவை எடுக்கப்பட்டு தானமாக வழங்கப்பட்டன.
நந்தினியின் கண்கள் திருச்சியில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் இருவருக்குப் பொருத்தப்பட்டன. சிறுநீரகங்கள், ஏசிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 40 வயது நபருக்குப் பொருத்தப்பட்டது.
கல்லீரல் எடுத்து பாதுகாக்கப்பட்ட நிலையில், பெங்களூரில் உள்ள நாராயண ஹிருதாலயாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு 9 வயது சிறுமிக்கு அது பொருத்தப்பட்டது.
டாக்டர் வேல் அரவிந்த் தலைமையிலான குழுவினர் இந்த அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திருச்சி மாவட்டத்தில் இந்த மாதத்தில் நடைபெறும் 2வது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இது.
அனைத்து அறுவைச் சிகிச்சைகளும் வெற்றிகரமாக முடிந்துள்ளன. உறுப்புகளைப் பெற்றவர்கள் நல்ல நிலையில் உள்ளனர்.
உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால் டாக்டர்களாக் கைவிடப்படும் நிலையில் உள்ள பல நோயாளிகளுக்கு புது வாழ்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
சுபா நந்தினியின் தந்தை மணிகண்டன் கண்களில் நீர் மல்க கூறுகையில், என்னைப் போல மற்றவர்களும் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும். அதனால் பலருக்கு வாழ்க்கை கிடைக்கிறது. எங்களது பிள்ளை மற்றவர்கள் ரூபத்தில் வாழ்வதாக நாங்கள் நிம்மதி அடைகிறோம் என்றார்.
அவரது மனைவி பூங்கொடி கூறுகையில், எங்களது மகளால் இத்தனை பேருக்கு வாழ்க்கை கிடைத்திருப்பது எங்களுக்கு நிம்மதியைத் தந்துள்ளது. தனிப்பட்ட முறையில் எங்களது மகளின் மரணம் பேரிழப்புதான் என்றாலும், அவளால் இத்தனை பேருக்கு வாழ்க்கை கிடைத்திருக்கிறதே என்று எண்ணி ஆறுதல் பட்டுக் கொள்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications