பாஜவுக்கு ஆதரவா?-ரஜினி மறுப்பு!

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், கட்சி துவங்க வேண்டும் என அவரது ரசிகர்களும், நலம் விரும்பிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும் தாம் நேரடி அரசியலில் ஈடுபடுவதற்கான சூழ்நிலை தற்போது தமிழகத்தில் இல்லை என்றும், இதுகுறித்து தாம் பரிசீலித்து வருவதாகவும், ஆண்டவன் நினைத்தால் நாளையே கட்சி என்றும் ரஜினி கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று சென்னை வந்த அத்வானி, ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்துக்கே போய் அவரைச் சந்தித்துப் பேசினார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இருவரும் பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய போதும், இந்தச் சந்திப்பின் போது ரஜினியின் அரசியல் பிரவேசம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இருவரும் முக்கிய ஆலோசனைகள் நடத்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் மாலையில் நடந்த அத்வானி புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ரஜினி, அத்வானியிடம் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார். விழா மேடையிலேயே, நீங்கள் அரசியலுக்கு வந்தே தீர வேண்டிய சூழல் இப்போது. இதைத் தட்ட வேண்டாம், என அத்வானி கூறினார். அதைச் சிரித்தபடி கேட்டுக் கொண்டார் ரஜினி.
பின்னர் புத்தகத்தை வெளியிட்ட தனது குரு சுவாமி தயானந்த சரஸ்வதியின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
விழா முடிந்து ரஜினி வெளியில் வந்த போது செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கோள்விகளும் அதற்கு ரஜினி அளித்த சுருக்கமான பதில்களும்...
அத்வானியுடன் அரசியல் பேசினீர்களா...?
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. சென்னை வரும்போது வீட்டு வருமாறு அழைப்பு விடுத்திருந்தேன். அவரும் வந்தார். அவ்வளவுதான்.
பாஜகவுக்கு ஆதரவாக வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்வீர்களா...?
நோ...நோ.. அப்படியெல்லாம் கிடையாது.
இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு உங்கள் ஆதரவு உண்டா?
ஸாரி... அப்படியெல்லாம் எதுவும் கூறவில்லையே...
பாஜகவில் சேருவீர்களா?
அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது!












Click it and Unblock the Notifications