20 சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு வலைவீச்சு
சென்னை: சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறை தொடர்பாக 20 மாணவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த பெரும் வன்முறையில், 4 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
இந்த மோதல் தொடர்பாக இதுவரை பால மணிகண்டன், ஜெயக்குமார், திலீபன்ஜா, பிரபாகரன், கோகுல்ராஜ், கோவிந்தன், இன்னொரு கோவிந்தன் ஆகிய 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று அவர்கள் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மேலும் 20 பேர் குறித்த தகவல் போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. டிவியில் காட்டப்பட்ட படங்களை அடிப்படையாக வைத்து இந்த 20 பேரையும் போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இவர்கள் 20 பேரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இவர்களில் சிலர் சட்டக் கல்லூரி மாணவர்கள் இல்லை என்றும், கல்லூரியில் நடந்த நுழைவுத் தேர்வை எழுத வந்த மாணவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இவர்களை சட்டக் கல்லூரியில் படித்து வரும் அவர்களது நண்பர்கள்தான் ஹாஸ்டலுக்கு அழைத்து வந்தது தெரிய வந்துள்ளது.
தாக்குதலுக்குப் பின்னர் இவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். இவர்களில் நான்கு பேர் பிடிபட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த 20 பேரும் எந்தெந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை. அவர்களைப் பிடிக்க மதுரை, நாகை, கடலூர், சேலம், நெல்லை ஆகிய ஊர்களுக்கு போலீஸ் தனிப்படைகள் விரைந்துள்ளன.
இவர்களில் சிலருக்கு சென்னையிலேயே சிலர் அடைக்கலம் தந்துள்ளதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications