சிட்டி பேங்க்: 1,000 இந்தியர்கள் வேலை பறிப்பு?
மும்பை: கிட்டத்தட்ட திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அமெரிக்காவின் சிட்டி வங்கி, தனது இந்திய கிளைகளில் பணியாற்றும் 10,000 ஊழியர்களில் 10 சதவீதம் பேரை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கிட்டத்தட்ட 3.5 லட்சம் பணியாளர்களைக் கொண்டுள்ள பிரமாண்ட தனியார் வங்கி சிட்டி. அமெரிக்காவின் நம்பர் ஒன் வங்கியாகத் திகழ்ந்தது. சிட்டி வங்கி மட்டும் வீழ்ந்தால், உலக தனியார் வங்கி கட்டமைப்பே தகர்ந்துவிடும் எனும் அளவுக்கு உலக நாடுகளின் வர்த்தகத்துடன் பின்னிப் பிணைந்த வங்கி இது.
ஆனால் லெஹ்மன் பிரதர்ஸைப் போலவே வராக்கடன், பெரும் நஷ்டம் மற்றும் பொருளாதார பெருமந்த நச்சு சூழலில் விழிபிதுங்கி நிற்கிறது சிட்டி. இந்த வங்கி திவாலானால் எழும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, இதனை மூழ்காமல் காப்பாற்றுவது எப்படி என பல நாட்டு அதிபர்களும் யோசித்து வருகின்றனர். 'சிட்டி வங்கி விழுவதை யாருமே விரும்பவில்லை. ஆனால் அவ்வளவு பெரிய வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தும் வழியும் யாருக்கும் தெரியவில்லை' என்று வங்கித் துறை நிபுணர்கள் கருத்துக் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் தனது பணியாளர்களில் 75,000 பேரை நீக்கப் போவதாகக் கூறிவந்த சிட்டி வங்கி, அவர்களில் 23,000 பேரை ஏற்கெனவே நீக்கிவிட்டது. மேலும் 52,000 பேர் நீக்கப்பட உள்ளனர்.
இவர்களில் 1000 பேர் இந்திய கிளைகளில் பணியாற்றுவோர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிட்டி பைனான்சியல் நிறுவனத்தில் இருந்துதான் பெரிய அளவில் ஆட்குறைப்பு இருக்கும் என அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்து உள்ளது.
விக்ரம் பண்டிட் நீக்கம்?:
இதற்கிடையே அந்த வங்கியின் தலைவர் விக்ரம் பண்டிட்டை நீக்கி்விட்டு புதியவரை நியமிக்கவும் சிட்டி பேங்கின் இயக்குனர்கள் குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
யுஏஇ அரசு உத்தரவாதம்:
இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்சி்ன் சிட்டி பேங்க் கிளைகளில் உள்ள முதலீடுகளுக்கு அந் நாட்டு அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. அதே போல வேறு சில தனியார், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணத்துக்கும் அந்த நாடு உத்தரவாதம் அளித்துள்ளது.
இந்த அறிவிப்பு அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு பெரும் நிம்மதியைத் தரும்
என்பது நிச்சயம்.