சென்னை மழை பாதித்த பகுதிகளில் கருணாநிதி ஆய்வு
சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் கருணாநகிதி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர் மழையால் சென்னை நகரம் தத்தளித்து வருகிறது. புறநகர்ப் பகுதிகள்கிட்டத்தட்ட நீரில் மிதக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. பல பகுதிகளில் மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு போய் விட்டனர்.
இந்த நிலையில், முதல்வர் கருணாநிதி இன்று கோட்டூர்புரம், காந்தி மண்டபம், சைதாப்பேட்டை, கீழ்ப்பாக்கம், பெரம்பூர் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று மழை, வெள்ள நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விரைவில் மத்திய நிபுணர் குழு வருகை தரும் என எதிர்பார்க்கிறோம். வெள்ள நிவாரணப் பணிகளுக்குத் தேவையான நிதியுதவியை மத்திய அரசு அளிக்கும் என நம்புகிறோம்.
நிஷா புயலால் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை மத்திய அரசுக்கு ஏற்கனவே வழங்கி விடடோம்.
நானே அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, சேத பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கைளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டேன் என்றார்.
முதல்வருடன் உணவுத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, சென்னை மேயர் சுப்ரமணியம், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி மற்றும் காவல்துறை அதிகாரிகளும் உடன் சென்றனர்.












Click it and Unblock the Notifications