தாவூத்-மும்பை தொழிலதிபர் உதவினர்: தீவிரவாதி
மும்பையை உலுக்கிய தீவிரவாதத் தாக்குதலில் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வெறிச் செயலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் கஸரைத் தவிர அனைத்துத் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு விட்டனர். கஸர் மட்டுமே உயிருடன் பிடிபட்டான்.
பிடிபட்ட பாக். தீவிரவாதி
21 வயதாகும் கஸர், கிர்காம் செளபாத்தி நாகா என்ற இடத்தில், ஒரு காரை நிறுத்தி, அதன் உரிமையாளரைத் தாக்கி காரைப் பறித்துக் கொண்டு தப்ப முயன்றபோது போலீஸாரால் பிடிக்கப்பட்டான்.
கஸர், பாகிஸ்தானின் பரீத்கோட் நகரைச் சேர்ந்தவன். மும்பை போலீஸாரும், ஐபி அதிகாரிகளும் இவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை கஸர் தெரிவித்துள்ளான். மேலும் தனது செயல் முற்றிலும் சரியானதே, இதில் வருத்தப்பட எதுவும் இல்லை என்றும் அவன் கூறியுள்ளான்.
தாவூத் இப்ராகிமே காரணம்!
பாகிஸ்தானில் தஞ்சமடைந்திருக்கும் தாதா தாவூத் இப்ராகிம்தான் இந்த பயங்கர தாக்குதலுக்கு திட்டம் போட்டுக் கொடுத்து, அரங்கேற்றியது என்பதை கஸர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.
மும்பை, கொலாபா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரும், தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியுமான ஒரு நபர்தான், தாக்குதலுக்குத் தேவையான அனைத்து வகை ஆயுதங்களையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கஸர், லஷ்கர் இ தொப்யா அமைப்பைச் சேர்ந்தவன். மும்பை போலீஸாரிடம் கஸர் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் ...
12 பேர் கும்பல்
மொத்தம் 12 பேர் கராச்சியிலிருந்து படகுகள் மூலம் சசூல் துறைமுகப் பகுதிக்கு வந்தோம். அங்கிருந்து கபே பரேட் பகுதிக்கு சென்றோம். பின்னர் தாவூத் இப்ராகிம் கூட்டாளியான மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஏற்பாடு செய்த படகு மூலம் கேட்வே ஆப் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தோம்.
தாவூத் ஏற்பாடு செய்திருந்த படகில் எங்களுக்குத் தேவையான ஆயுதங்கள், வெடிபொருட்கள், பிளாஸ்டிக் வெடிபொருட்கள் உள்ளிட்டவை இருந்தன.
லஷ்கர் தீவிரவாதி
நான் செய்தது சரியே. அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் லஷ்கர் இயக்கத்தைச் சேர்ந்தவன்.
நானும் இஸ்மாயில் கானும் சேர்ந்துதான் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரகேவை சுட்டு வீழ்த்தினோம். அதேபோல, விஜய் சலேஷ்கர் (என்கெளன்டர் ஸ்பெஷலிஸ்ட்), அசோக் காம்தே (கூடுதல் கமிஷனர்) ஆகியோரையும் சுடடு வீழ்த்தினோம்.
தாஜ் ஹோட்டலில் நான் ஒரு அறையையும் புக் செய்திருந்தேன். ரூம் நம்பர் 603ல் தங்கினேன். என்னுடன் கூட்டாளிகளும் தங்கினர். அங்கு தான் வெடிபொருட்களை பதுக்கி வைத்தோம் என்று கூறியுள்ளான் கஸர்.
டிச. 11 வரை போலீஸ் காவல்
இந்த நிலையில் பிடிபட்டுள்ள தீவிரவாதி கஸர், நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தப்பட்டான். அப்போது அவனிடம் மேலும் விசாரிக்க வேண்டியுள்ளதால் போலீஸ் காவலில் அனுமதிக்குமாறு போலீஸ் தரப்பில் கோரப்பட்டது.
இதை ஏற்ற நீதிமன்றம், கஸரை டிசம்பர் 11ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து கஸர் ரகசிய இடத்திற்குப் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டான். அவனிடம் நடைபெறவுள்ள தொடர் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.













Click it and Unblock the Notifications