பாபர் மசூதி இடிப்பு தினம் - தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு
சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே 9 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், பஸ் நிலையங்கள், கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், முக்கிய பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாகனத் தணிக்கையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னை நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டு பின்னர் உள்ளே அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நட்சத்திர ஹோட்டல்கள், வணிக வளாக மால்கள், திரையரங்குகளும் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
மதுரையில் ...
தமிழகத்தின் தென் மாவட்டங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயுதம் தாங்கி பாதுகாப்புப் படையினர் 24 மணி நேர பாதுகாப்பில் உள்ளனர். அதேபோல பழனி தண்டாயுதபாணி கோவில், நெல்லையப்பர் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ளிட்ட அனைத்து முக்கிய கோவில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல ரயில் நிலையங்கள், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களின் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மோப்ப நாய்கள், வெடிகுண்டுகளை அகற்றும் கருவிகள் மூலம் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தென் மாவட்ட எல்லைப் பகுதிகள் முழுவதும் தீவிர வாகனத் தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாம்பன் ரயில் பாலம் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல ராமேஸ்வரமும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications