ஜெ- காரத் சந்திப்பு: உருவானது அதிமுக-இடதுசாரி கூட்டணி

இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் இன்று சந்தி்த்துப் பேச்சு நடத்தினார். இதையடுத்து இந்தக் கூட்டணி உருவானது.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, இன்று காரத்துடன் மகிழ்ச்சிகரமான சந்திப்பு நடந்தது. நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இடதுசாரிகள்-அதிமுக கூட்டணி ஏற்பட்டுள்ளது என்றார்.
காரத் பேசுகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நாங்களும் அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளோம் என்றார்.
இரு வாரங்களுக்கு முன் இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ஏ.பி.பரதன், மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணி குறித்துப் பேசியது நினைவுகூறத்தக்கது.
இந் நிலையில், தமிழகத்தில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பிரகாஷ் காரத்தும் கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து மாலையில் மாநிலக் குழுக் கூட்டமும் நடந்தது. இக் கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது என சிபிஎம் முடிவெடுத்தது. இன்றும் இந்தக் கூட்டம் தொடர்ந்து நடந்தது.
இதையடுத்து பிரகாஷ் காரத், போயஸ் தோட்டம் சென்று ஜெயலலிதாவை சந்தித்தார்.
இரு இடதுசாரி கட்சிகளுக்கும் அதிமுக தலா 4 முதல் 5 இடங்களை ஒதுக்கும் என்று தெரிகிறது.
முன்னதாக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக திட்டமிட்டிருந்தது. இதற்காக ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமான பாஜக தலைவரான குஜராத் முதல்வர் நரேநதிர மோடியே களமிறங்கினார்.
ஆனால், பாஜகவை விட இடதுசாரிகளுக்கே தமிழகத்தில் அதிக ஓட்டுக்கள் இருப்பதால் அந்தக் கட்சியை கழற்றிவிட்டுவிட்டது அதிமுக.
இதையடுத்து ஒரு மூத்த பத்திரிக்கையாளர் மூலமாக ரஜினியை பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்துக்கு இழுக்க அக் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி முயன்று வருகிறார். அந்தப் பத்திரிக்கையாளர் உதவியோடு இருவரும் சந்தித்தும் பேசினர். ஆனால், ரஜினி நழுவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க இடதுசாரிகள் திட்டமிட்டிருந்தன. இடதுசாரிகள் தவிர வேறு யாருடனும் கூட்டணி அமைக்க விஜய்காந்தும் விரும்பவில்லை. ஆனால், அவர்களுடன் விஜய்காந்த் முறையான பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.
இந் நிலையில் ஜெயலலிதா முந்திக் கொண்டு இடதுசாரிகளை தன் பக்கம் இழுத்துவிட்டார். இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் 7 முதல் 8 சதவீதம் வரை வாக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இடதுசாரிகள் அதிமுக பக்கம் போய்விட்டது திமுகவுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.












Click it and Unblock the Notifications