குளத்தில் கார் விழுந்ததில் மனைவி, மகனுடன் என்ஜீனியர் பலி
தூத்துக்குடி: வேகமாக சென்ற கார் தடுமாறி குளத்தில் விழு்நததில் தூத்துக்குடி அனல் மின் நிலைய பொறியாளர், அவரது மனைவி, மகனுடன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
தூத்துக்குடி தெர்மல்நகர் குடியிருப்பில் வசித்து வந்தவர் சுடலைமுத்து மகன் சுடலையாண்டி (52). இவர் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் என்ஜினீயராக வேலை பார்த்தார்.
சுடலையாண்டி மற்றும் அவரது மனைவி சங்கரி (46), மகன்கள் சிவராம் (18), சுடர்சபரி (12) ஆகியோர் குடும்பத்துடன் திருமணவிழாவில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடியில் இருந்து திசையன்விளைக்கு காரில் சென்றனர்.
திருமணவிழா முடிந்தவுடன் நேற்று இரவு அதே காரில் சுடலையாண்டி தனது குடும்பத்துடன் திசையன்விளையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்துகொண்டிருந்தார்.
சுடலையாண்டி காரை ஓட்டினார். இரவு நேரம் குளிர்ந்த காற்று வீசியதால் காரின் ஜன்னல் கண்ணாடிகளை அடைத்திருந்தனர். முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த சிவராம் மட்டும் ஜன்னல் கண்ணாடியை திறந்து வைத்திருந்தார்.
இரவு 11 மணியளவில் மணியளவில் அந்த கார் ஆத்தூருக்கு முன்னதாக உள்ள நரசன்விளை ஊருக்கு அருகே வந்த போது திடீரென நிலைதடுமாறி ரோட்டின் அருகில் இருந்த குளத்துக்குள் பாய்ந்தது. அப்போது குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் கார் மூழ்கியது.
காரின் முன்பக்கம் அமர்ந்திருந்த சிவராம் மட்டும் ஜன்னல் வழியாக தப்பி கரைக்கு வந்தார். பின்னர் அவர் ஓடி சென்று அருகில் இருந்து ஊர் மக்களிடம் தகவலை கூறினார். அவர்கள் போலீசாருக்கு தகவல் கூறினர்.
பின்னர் ஊர்மக்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அவர்கள் அனைவரும் இணைந்து ஒரு லாரியில் கயிறு கட்டி குளத்தில் மூழ்கியிருந்த காரை மீட்டனர்.
பின்னர் காரை திறந்து பார்த்த போது அதில் இருந்த என்ஜினீயர் சுடலையாண்டி மற்றும் அவரது மனைவி சங்கரி (46), மகன் சுடர்சபரி (12) ஆகிய 3 பேரும் மூச்சுதிணறி இறந்து கிடந்தனர்.
சிவராம் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.












Click it and Unblock the Notifications