டெல்லி: பாஜகவை தடுத்து நிறுத்திய ஷீலா தீட்சித்
அங்கு பாஜக சார்பில் மூத்த தலைவரான விஜய்குமார் மல்ஹோத்ரா முதல்வர் பதவிக்கு முன் நிறுத்தப்பட்டார். ஆனால், அவருக்கு குரானா உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்களிடமிருந்து எதிர்ப்பு இருந்து வந்தது.
மேலும் முதல்வர் பதவிக்கு சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி ஆகியோரின் பெயர்களும் அடிபட்டன. ஆனால், அவர்களை ஒதுக்கிவிட்டு மல்ஹோத்ராவை முன் நிறுத்தினார் அத்வானி.
அந்த மாநிலத்தில் பாதுகாப்பு, விலைவாசி ஆகியவற்றை முன் வைத்து பாஜக தேர்தலை சந்தித்தது. அதே நேரத்தில் மாநிலத்தில் தான் கொண்டு வந்த வளர்ச்சித் திட்டங்களை முன் வைத்து தேர்தலை சந்தித்தார் ஷீலா தீட்சித்.
இது காங்கிரசுக்குக் கிடைத்த வெற்றி என்பதை விட ஷீலாவுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.
அங்கு ஆட்சியமைக்க 34 இடங்கள் வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் 42 இடங்களில் வென்றுள்ளது. இங்கு பகுஜன் சமாஜ், ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்தி ஆகியவையும் தலா இரு இடங்களைப் பிடித்துள்ளன.
ஆச்சரியமாக உள்ளது-பாஜக:
இந்தத் தேர்தல் முடிவு கருத்து தெரிவித்த பாஜக தலைவர் ராஜ்நாத் சி்ங், டெல்லி, ராஜஸ்தான் தேர்வு முடிவுகள் ஆச்சரியமாக உள்ளன என்றார்.
மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறுகையில், வேட்பாளர் தேர்வு சரியில்லாததால் தான் பாஜக தோற்றது என்றார்.
நல்ல நிர்வாகமே காரணம்-தீட்சித்:
தனது வெற்றி குறித்து ஷீலா தீட்சித் கூறுகையில், நாங்கள் சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சித் திட்டங்களில் மிகவும் கவனம் செலுத்தினோம். இதனால் எங்கள் வெற்றி நிச்சயமானது. இதனால் தீவிரவாதத் தாக்குதலை பாஜக அரசியலாக்கி காங்கிரஸை முடக்கப் பார்த்தது. ஆனால், அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டி விட்டனர் என்றார்.