ராஜஸ்தான் முதல்வர் பதவி: கெலோட்-ஓலா ஆதரவாளர்கள் அடிதடி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் பதவியைப் பிடிக்க அசோக் கெலோட்டுக்கும், மத்திய அமைச்சர் சிஸ்ராம் ஓலாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இன்று ஜெய்ப்பூரில் இரு தலைவர்களின் ஆதரவாளர்களும் அடிதடியில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தானில் பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது காங்கிரஸ். ஆனால் வழக்கம் போல காங்கிரஸ் பாணி கலவரம் ராஜஸ்தானில் வெடித்துள்ளது.
ஜாட் இனத்தைச் சேர்ந்தவருக்குத் தான் முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்று ஓலா போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதன்மூலம் அந்தப் பதவியைப் பிடிக்க ஓலா முயல்கிறார்.
ஆனால், ராஜஸ்தானில் பிரச்சாரத்தை முன்னின்று நடத்தி கட்சியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர் அசோக் கெலோட். எனவே அவர், தன்னையே முதல்வராக்க வேண்டும் என்கிறார்.
ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்கிவிட்டு கெலோட்டை முதல்வராக்க சோனியா திட்டமிட்டுள்ளார். ஆனால், ஓலா ஏதாவது குழப்பம் செய்தால் ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களி்ல் ஜாட் சமுதாயத்தினரின் வாக்குகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் இழக்க வேண்டி வரும்.
இதனால் காங்கிரஸ் மேலிடம் குழப்பத்தில் உள்ளது.
இந் நிலையில் இன்று காலை ஜெய்ப்பூரில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.எல்.ஏக்களின் கூட்டம் கூடியது.
உள்ளே கூட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான காங்கிரஸார் திரண்டிருந்தனர். இவர்களில் ஓலா மற்றும் கெலாட் ஆதரவாளர்களுக்கிடையே திடீரென மோதல் மூண்டது.
இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் நோக்கில் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிலர் இதில் தள்ளி விடப்பட்டனர். போலீஸார் உடனடியாக உள்ளே பாய்ந்து இரு தரப்பினரையும் விலக்கி விட்டனர்.
இருப்பினும் அவர்கள் விலகிச் செல்லாமல் தொடர்ந்து அலுவலகத்திற்கு வெளியே குழுமியுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் குவிந்திருப்பதால் முதல்வர் யார் என்பதை வெளியில் சொன்னால் சிக்கலாகி விடும் என்று கருதி, முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் தலைமை இதுவரை அறிவிக்காமல் உள்ளது.