கர்கரே மரணத்தில் மர்மம்: மத்திய அமைச்சர் சந்தேகம்-பாஜக எதிர்ப்பு
இதுகுறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அந்துலே, தீவிரவாதத்திற்குத்தான் கர்கரே பலியானாரா அல்லது வேறு காரணத்திற்காகவா என்று எனக்குத் தெரியவில்லை.
கர்கரே மிகவும் துணிச்சலான ஒரு அதிகாரி. அவரது தேசபக்தியை நான் நன்கு அறிவேன். மிகப் பெரிய அதிகாரி அவர். நாட்டுக்காக எந்த நேரத்திலும் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருந்தவர் அவர்.
ஆனால், தீவிரவாதிகள் பெரும் தாக்குதலில் ஈடுபட்டிருந்த தாஜ் ஹோட்டலுக்கோ அல்லது ஓபராய் ஹோட்டலுக்கோ செல்லாமல், ஒன்றுமே நடக்காத ஒரு இடத்திற்கு எப்படி கர்கரே போனார் என்று புரியவில்லை.
மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அவர் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி வந்தார். அந்த சம்பவத்தில் முஸ்லீம்கள் அல்லாதோர் சம்பந்தப்பட்டிருப்பதாக அவர் கண்டுபிடித்தார். மாலேகான் சம்பவத்திற்கு முஸ்லீம் சமுதாயம் அல்லாத தீவிரவாதிகளே காரணம் என்பதை அவர் கண்டுபிடித்தார்.
எனவே அவர் தீவிரவாதத்திற்குத்தான் உண்மையிலேயே பலியானாரா அல்லது வேறு காரணமா என்று எனக்குத் தெரியவில்லை. அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் நன்கு தெரியும். அவருக்கு நான் சல்யூட் செய்கிறேன் என்றார் அந்துலே.
கர்கரே, கூடுதல் கமிஷனர் அசோக் காம்தே, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலேஸ்கர் ஆகியோர் மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின்போது காமா மருத்துவமனை அருகே சுட்டுக் கொல்லப்பட்டது நினைவுகூறத்தக்கது.
பிரதமர் விளக்கமளிக்க பாஜக கோரிக்கை:
இதற்கிடையே, அந்துலேவின் பேட்டி குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி செய்தியாளர்களிடம் கூறுகையில், அந்துலேவின் கருத்துக்கள் தனிப்பட்ட நபருடையதா அல்லது அவர் வகிக்கும் அமைச்சரவை அல்லது அரசின் கருத்தைப் பிரதிபலிக்கிறதா என்பதை பிரதமர் மன்மோகன் சிங் தெளிவுபடுத்த வேண்டும்.
அவரது கருத்து விஷமத்தனமானது, எனவே இதுகுறித்து கண்டிப்பாக பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்றார் அவர்.
அந்துலேவின் இந்தப் பேட்டியால் புதிய பரபரப்பு எழுந்துள்ளது.