மாணவர்களுக்கு பளார் விட்ட ஆசிரியர் மீது போலீஸில் புகார்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே மாணவர்களை அடித்ததாக ஆசிரியர் மீது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டிணத்தில் அரடு ஐடிஐ உள்ளது. இதில் உடன்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மகன் இளங்கோ, குரங்கன்தட்டு மாரியப்பராஜா மகன் முத்துகுமார் ஆகியோர் உலோக தகடு வேலையாள் பயிற்சி பிரிவில் படித்து வருகின்றனர்.
இடைவேளையின் போது மாணவர்கள் இளங்கோ, முத்துகுமார், எம்ஜீஆர், வீரபாகு, யோவன் டெண்சன், முருகன் உள்ளிட்ட சிலர் அரசு போக்குவரத்து கழக டெப்போ எதிரில் உள்ள கடையில் டீக்குடித்து விட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பொருத்துனர் பயிற்சி பிரிவு உதவி ஆசிரியர் ராஜதாஸ், மாணவர்கள் முத்துகுமார், இளங்கோ ஆகியோரது கன்னத்தில் அறைந்தார். மேலும் சட்டையை பிடித்து இழுத்து தாக்கினார். இதில் காயமடைந்த இருவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இச்சம்பவம் குறித்து இளங்கோ திருச்செந்தூர் போலீசில் புகார் செய்தார். ஆசிரியர் ராஜதாஸ் மீது இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் பாண்டி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications