இந்தியாவின் புதிய தீவிரவாத தடை சட்டம்: ஆம்னஸ்டி விமர்சனம்
லண்டன்: மும்பைத் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள, புதிய தீவிரவாத தடுப்புச் சட்டங்களுக்கு ஆம்னஸ்டி இன்டர்நேஷனரல் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனித உரிமைகளை இது காக்கத் தவறி விடும் என அது கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் ஆசியா பசிபிக் திட்ட இணை இயக்குநர் மது மல்ஹோத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைள் தடுப்புச் சட்டத் திருத்தம் மற்றும் தேசிய புலனாய்வு ஏஜென்சியை அமைப்பதற்கான சட்ட மசோதா ஆகியவை மனித உரிமைக்கு எதிரானவையாக உள்ளன. எனவே இவற்றை இந்திய குடியரசுத் தலைவர் நிராகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
ஜாமீனே இல்லாமல் கைது செய்யப்பட்டவரை ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைக்கலாம் என்ற ஷரத்து, அபாயகரமானது. மனித உரிமைக்கு முரண்பாடானது.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதலை நாங்கள் மிகக் கடுமையாக கண்டிக்கிறோம். அதேசமயம், மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் இந்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என விரும்புகிறோம். பாதுகாப்பு என்ற போர்வையில் மக்களின் அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் பலிகடாவாக்கப்பட்டு விடக் கூடாது என்று கூறியுள்ளார்.