'அந்துலே'-ராஜ்யசபாவில் அமளி-2 முறை ஒத்திவைப்பு
டெல்லி: மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் ஏ.ஆர்.அந்துலேவை பதவி நீக்கம் செய்யக் கோரி பாஜக எம்பிக்கள் இன்று மாநிலங்களவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.
மலேகாவ்ன் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்த மும்பை பயங்கரவாத எதிர்ப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்காரே தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் இன்னும் ஏதோ சில விஷயங்கள் மறைந்திருப்பதாக சர்ச்சையைக் கிளப்பினார் அந்துலே.
இதையடுத்து அவருக்கு எதிராக பாஜக, சிவசேனா ஆகியவை போராட்டத்தில் குதித்தன. இதைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அந்த ராஜினாமாவை காங்கிரஸ் இன்னும் ஏற்கவில்லை.
இந் நிலையில் இன்று காலை மாநிலங்களவை கூடியதும் பாஜக உறுப்பினர்கள் அந்துலேவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அவையின் மையப் பகுதியில் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியது. அப்போதும் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். இந் நிலையில் எல்.ஐ.சி. சட்டத் திருத்தம் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு இடதுசாரிகள், அதிமுக ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் அமளி ஏற்பட்டது. இதனால் அவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications