காங்கிரசோடு திமுக 'உடன்கட்டை' ஏறும்- சிபிஐ

தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் ஜீவாவின் சிலை திறப்பு விழா நடைபெற்றது.
அதில் தா.பாண்டியன் பேசுகையி்ல்,
நாடு முழுவதும் விலைவாசி உயர்ந்து அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம்பற்றாக்குறையால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்பனர்.
விவசாயிகளோ பயிர்களை காக்க முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. மத்திய அமைச்சரவையில் அதிக அளவில் மந்திரிகள் இருந்து என்ன பயன் கிடைத்துள்ளது என்றால் ஸ்பெக்ட்ரம் டெண்டர் விடுவதில் இந்தியாவிற்கு ரூ. 60,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
திமுகவும், காங்கிரஸ் கட்சியும் இன்றைக்கு கணவன் மனைவி போல் உள்ளன. கணவன் இறந்து விட்டால் மனைவி உடன்கட்டை ஏறுவாள். அதுபோல் திமுக உள்ளது. அதிமுக கூட்டணியை பிரிக்க பலவகையான முயற்சியில் ஈடுபட்டும், எழுதியும் வருகிறார் முதல்வர் கருணாநிதி.
மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி அமைக்கத்தான் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். அதிமுக தொடங்கப்பட்ட காலத்தில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆருக்கும், கருணாநிதிக்கும் கடும்போட்டி ஏற்பட்டது. அப்போது பெரும் திருப்பமாக அதிமுக வெற்றி பெற்றது.
இன்றைக்கு இடைத்தேர்தல் நடக்கும் திருமங்கலம் தொகுதி அன்றைக்கு திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் அடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. திருமங்கலம் இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று கூட்டணிக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்றார் பாண்டியன்.
27ல் சிபிஎம் பொதுக்கூட்டம்:
இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ப.முத்துராமலிங்கத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தன் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது.
இந்தத் தேர்தலையொட்டி, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் 27ம் தேதி திருமங்கலத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு தலித் மக்கள் முன்னணி ஆதரவு:
இதற்கிடையே திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு தலித் மக்கள் முன்னணி ஆதரவு தெரிவித்துள்ளது.
இதை அக் கட்சியின் தலைவர் குமரி அருண் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications