உயர் ஜாதியினர் ஆதரவு இருந்தால்தான் வெற்றி-மாயாவதி
சென்னை: உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது போல தமிழகத்திலும் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என உ.பி. முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி கூறினார்.
தெற்கில் தனது கவனத்தைத் திருப்பியுள்ள மாயாவதி நேற்று மாலை சென்னையில், நடந்த சகோதரத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
புனித ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு, 5000 பேர் வருவார்கள் என பகுஜன் சமாஜ் கட்சி எதிர்பார்த்தது. ஆனால் அந்த அளவுக்கு கூட்டம் கூடவில்லை.
இருப்பினும் பகுஜன் சமாஜ் கட்சியினர் உற்சாகமான நிலையில் காணப்பட்டனர். மாயாவதி ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. கட்சியின் மாநில தலைவர் செல்வத்தின் மகள் அட்சயப் பிரியா, கட்சியின் குழந்தைகள் நல நிதிக்கு ரூ. 10 லட்சம் நன்கொடை அளித்தார்.
கூட்டத்தில் மாயாவதி பேசுகையில், பகுஜன் சமாஜ் கட்சி எந்த குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் சொந்தமானதல்ல. இது அனைத்து சமுதாயத்திற்குமான கட்சி. அனைவருக்கும் பொதுவான கட்சி. அனைவரிடத்திலும் சகோதரத்துவம் மேலோங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கட்சி.
மக்கள் விரோத சக்திகளான காங்கிரஸ், பாஜக ஆகியவை தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் ஆகியோருக்கு உரிய இடஒதுக்கீடு தராமல் அவர்களை சமூகரீதியில் மோசமடையச் செய்துவிட்டனர். உயர் ஜாதியில் இருக்கும் ஏழைகளுக்கு அந்த அரசுகள் எதையும் செய்ததில்லை. செய்யப் போவதுமில்லை.
உயர் ஜாதியினருக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. உயர் ஜாதியினரும் தேவை. அவர்களின் ஆதரவும் இருந்தால்தான் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
உயர் ஜாதியில் உள்ள ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு தேவை என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் மத்திய அரசு இதுவரை பதில் அனுப்பவில்லை.
கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸும், பாஜகவும்தான் நாட்டை ஆண்டுள்ளன. ஆனால் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவை ஒன்றும் செய்யவில்லை. அதனால்தான் அடித்தட்டு மக்கள் இன்னும் அதே நிலையில் இருக்கிறார்கள். அனைத்து தரப்பு மக்களுக்கும் சமத்துவம் ஏற்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் விரும்புகிறது. இந்த எண்ணம் கொண்ட கட்சியால் மட்டுமே சமத்துவ நிலை ஏற்படும் என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும்.
இந்த நிலை நாடு முழுவதும் ஏற்பட வேண்டுமானால் மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி இருக்க வேண்டும். அதிகாரம் கிடைத்தால்தான் சமூக அவலங்கள விரட்டியடிக்க முடியும்.
தமிழகத்தில் அனைத்து சமூகத்தினரையும் ஒன்று சேர்க்க பகுஜன் சமாஜ் கட்சியினர் முயல வேண்டும். அனைவரிடத்திலும் சென்று நமக்கு ஆதரவு கேளுங்கள். இதற்கு மற்ற கட்சிகளிடமிருந்து எதிர்ப்புகள் வரலாம். அதையும் மீறி உங்களால் சாதிக்க முடியும். உத்தரப் பிரதேசத்தைப் போல தமிழகத்திலும் நாம் ஆட்சியைப் பிடிப்போம் என்றார் மாயாவதி.
மாயாவதியின் பேச்சில் முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் எதுவும் இடம் பெறாதது தொண்டர்களை சோர்வடையச் செய்தது. மேலும், திமுக, அதிமுக குறித்தும் அவர் எதுவும் பேசவில்லை. பொதுவான முறையிலேயே அவர் பேசி விட்டுச் சென்றார். தமிழ்நாட்டுக்கென தனித் திட்டம் எதையும் அவர் அறிவிக்காததால் கட்சியினர் ஏமாற்றமடைந்தனர்.
பகுஜனில் முன்னாள் கமிஷனர் காளிமுத்து:
நிகழ்ச்சியின்போது சென்னை மாநகர முன்னாள் காவல்துறை ஆணையர் காளிமுத்து, முன்னாள் அதிமுக எம்.பி. ஸ்ரீதர் ஆகியோர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தனர்.
மாநாட்டு முடிவில் டிரம்ஸ் சிவமணியின் இசையை மாயாவதி நின்று ரசித்துவிட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications