தூத்துக்குடியில் கடத்தப்பட்ட குழந்தை கும்பகோணத்தில் மீட்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியிலிருந்து கடத்தப்பட்ட குழந்தை கும்பகோணத்தில் வைத்து மீட்கப்பட்டது.
தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி பஞ்சவர்ணம் இவர்களுக்கு ஐஸ்வர்யா, பாலம்மாள் என்ற இருகுழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பஞ்சவர்ணம் கடந்த 5 மாதங்களுக்கு முன் கணவரை விட்டு பிரிந்து அதே பகுதியைச் சேர்ந்த இருதயம்மாள் நகரை சேர்ந்த செல்வராஜ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
அப்போது தனது குழந்தை பாலம்மாளை தன்னுடன் அழைத்து வந்துவிட்டார். மூத்த மகள் ஐஸ்வர்யா தந்தையுடன் இருந்து கொண்டது.
2வது கணவரின் வீட்டிற்கு வந்த பஞ்சவர்ணம் சில நாட்களில் ஆண் குழந்தை பெற்றார். இதற்கிடையில் கடந்த 4ம் தேதி அந்த குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி சென்று விட்டனர். இதுகுறித்து தாளமுத்து நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குழந்தையை தேடி வந்தனர். வேறு ஒரு வழக்கு தொடர்பாக தனிப்படையினர் கும்பகோணம் சென்றபோது அங்கு பஞ்சவர்ணத்தின் ஆண்குழந்தை இருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து கும்பகோணம் குடவாசலை சேர்ந்த எட்வின் மனைவி கனி, தூத்துக்குடி மாதாநகர் சுரேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.