கஸாப் குறித்த கருத்து-நவாஸ் ஷெரீப் 'பல்டி'
இஸ்லாமாபாத்: அஜ்மல் கஸாப் பாகிஸ்தான் நாட்டவர்தான் என்று முதலில் கூறியிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், இப்போது பாகிஸ்தானிதான் கஸாப் என்பதற்கான ஆதாரங்களை இந்தியா தர வேண்டும் என பல்டி அடித்துள்ளார்.
கஸாப், பாகிஸ்தானி அல்ல என்று பாகிஸ்தான் அரசு கூறி வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த ஷெரீப், தனிப்பட்ட முறையில் விசாரித்துப் பார்த்து விட்டேன். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவன்தான் கஸாப்.
அவனது கிராமத்தை பாதுகாப்புப் படையினர் முற்றுகையிட்டுள்ளனர். அவனுடைய பெற்றோரை மற்றவர்கள் சந்திக்காமல் தடுத்து வருகிறார்கள். இதை ஏன் பாகிஸ்தான் அரசு மறைக்க விரும்புகிறது எனத் தெரியவில்லை. விசாரணை நடக்கட்டும், உண்மை தெரியட்டும் என்று கூறியிருந்தார்.
மேலும், அதிபர் சர்தாரி, பாகிஸ்தானை தோல்வியடைந்த நாடாக மாற்றும் நோக்கில் போய்க் கொண்டிருக்கிறார் எனவும் சாடியிருந்தார்.
ஆனால் இப்போது தனது கருத்திலிருந்து விலகி, கஸாப், பாகிஸ்தானிதான் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை இந்தியா வழங்க வேண்டும் என கூறியுள்ளார் ஷெரீப்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மும்பைத் தாக்குதலுக்குப் பாகிஸ்தான்தான் காரணம் என்று கூறுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்று கூறும் நபர்கள் குறித்த உறுதியான ஆதாரங்களை இந்தியா வழங்க வேண்டும். அப்படி உண்மையான, வலுவான, உறுதியான ஆதாரங்களை இந்திய அரசு கொடுத்தால், நானே, அதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் சர்தாரியை கேட்டுக் கொள்வேன் என்று கூறியுள்ளார் ஷெரீப்.
இந் நிலையில் நவாஸ் ஷெரீப் சில அமைப்புகளால் மிரட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications