கஸாப் குறித்த ஆவணமே இல்லையாம்-சொல்கிறது பாக்
இஸ்லாமாபாத்: அஜ்மல் கஸாப் குறித்த எந்தத் தகவலும் எங்களது ஆவணங்களில் இல்லை. இருப்பினும் அவன் கோரியுள்ள சட்ட உதவி குறித்து புதன்கிழமை பதிலளிக்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
கஸாப் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன் தான் என்பதை கஸாப் கொடுத்துள்ள வாக்குமூலமும், பாகிஸ்தான் மற்றும் சர்வதேச மீடியாக்களும் தெள்ளத் தெளிவாக நிரூபித்துள்ளன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், ஓகாரா மாவட்டத்தைச் சேர்ந்த பரீத்கோட் கிராமத்தில் வசித்து வரும் அவனது தந்தையும், கஸாப் எனது மகன்தான் என்பதை பகிரங்கமாக தெரிவித்து பேட்டி அளித்திருந்தார்.
ஆனால் கஸாப் பாகிஸ்தானியே கிடையாது என்று அந்நாட்டு அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. பரீத்கோட் கிராமத்திற்குள் பத்திரிக்கையாளர்கள் யாரும் நுழைய அனுமதிக்கப்படுவது இல்லை. அவன் குறித்த எந்தத் தகவலும் வெளியாகாமல் படு கவனமாக இருக்கிறது பாகிஸ்தான் அரசு.
இந்த நிலையில், சட்ட உதவி கோரியும், தன்னுடன் தாக்குதலில் ஈடுபட்டு இந்தியப் படையினரால் கொல்லப்பட்ட தீவிரவாதி இஸ்மாயில் கானின் உடலைப் பெற்றுக் கொள்ளும்படி கோரியும், கஸாப் பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளான் கஸாப். இந்தக் கடிதத்தை மத்திய வெளியுறவு அமைச்சகம், பாகிஸ்தான் தூதரை அழைத்து நேரில் கொடுத்துள்ளது.
ஆனால் கஸாப் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன்தான் என்பதற்கான ஆதாரத்தையும் இந்தியாவே தர வேண்டும் என குழந்தைத்தனமாக கூறி வருகிறது பாகிஸ்தான்.
இந்த நிலையில் பாகிஸ்தான் தேசிய ஆவண பதிவேட்டில் (டேட்டா பேஸ்) கஸாப் குறித்த எந்தத் தகவலும் இல்லை என பாகிஸ்தான் புது புளுகை அவிழ்த்து விட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சக தலைவர் ரஹ்மான் மாலிக் கூறுகையில், பாகிஸ்தானின் தேசிய புள்ளி விவர அமைப்பான தேசிய டேட்டா பேஸ் மற்றும் பதிவு ஆணையகத்தின் ஆவணங்களில், முகம்மது அஜ்மல் அமீர் கஸாப் என்ற பெயரே இல்லை. அந்த நபர் குறித்த எந்தத் தகவலும் இல்லை.
மும்பையில் பிடிபட்டதாக கூறப்படும் கஸாப் குறித்த எந்தத் தகவலும் டேட்டா பேஸில் இல்லை.
இருப்பினும் கஸாப் கோரியுள்ள உதவி குறித்து பாகிஸ்தான் அரசு உரிய முடிவெடுத்து புதன்கிழமையன்று தெரிவிக்கும் என்றார்.
இந்தப் பேட்டியை அளிப்பதற்கு முன்பு அவர், இன்டர்போல் தலைவர் ரொனால்ட் நோபலை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கஸாப் காவல் ஜன. 6 வரை நீட்டிப்பு:
இதற்கிடையே தீவிரவாதி அஜ்மல் கஸாப்பின் போலீஸ் காவல் ஜனவரி 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது போலீஸ் காவலில் உள்ள அவனது காவல் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து கஸாப்பின் போலீஸ் காவலை நீட்டிப்பதற்காக, மும்பை குற்றப் பிரிவு அலுவலகத்திற்கு மாஜிஸ்திரேட் வந்தார். அங்கு கஸாப்பின் காவலை ஜனவரி 6ம் தேதி வரை நீட்டித்து அவர் உத்தரவிட்டார்.
கஸாப் மட்டுமே இந்த வழக்கில் சிக்கியுள்ளான் என்பதால், பாதுகாப்பு கருதி கடந்த முறையும், மும்பை குற்றப் பிரிவு அலுவலகத்திற்கே வந்து மாஜிஸ்திரேட் காவலை நீட்டித்து விட்டுச் சென்றார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications