பொட்டு அம்மன் சரணடைந்ததாக இலங்கை வதந்தி
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் சரணடைந்ததாக இலங்கையில் வதந்தி கிளப்பப்பட்டது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர் பொட்டு அம்மன். இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் வலதுகரமாக திகழ்பவர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரனுடன் சேர்த்து இவரும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்.
இந்த நிலையில் நேற்று ராணுவத்திடம், பொட்டு அம்மன் சரணடைந்து விட்டார் என 'லங்காவெப்' என்ற இணையதளம், 'எல்லாளன்ஃபோர்ஸ்' என்ற பிளாக்கை மேற்கோள் காட்டி வதந்தி கிளப்பியது.
அந்த பிளாக்கில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரும், முன்னாள் 2ம் நிலை தளபதியுமான பொட்டு அம்மன் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தார். அவரை ராணுவத்தினர் ரகசிய இடத்திற்குக் கொண்டு சென்றனர்.
பொட்டு அம்மன் சரணடைந்ததால் புலிகள் இயக்கத்திற்கு எந்த நஷ்டமும் இல்லை. அவர் மீது 'தலைவர்' அதிருப்தியுடன்தான் இருந்து வந்தார். எனவேதான் உயிரைக் காத்துக் கொள்ள பொட்டு அம்மன் ராணுவத்திடம் சரணடைந்து விட்டார் என்று அந்த பிளாக் கூறுகிறது.
ஆனால் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா விளக்கியுள்ளார்.
பொட்டு அம்மன் ராணுவத்திடம் சரணடையவில்லை. அவர் எங்களது கட்டுப்பாட்டிலும் இல்லை என்று கூறியுள்ளார் நாணயக்காரா.