சினிமா: புகை பிடிக்கும் காட்சிகளுக்கு தடை-அன்புமணி
பாமகவின் 'மக்கள் டிவி' சார்பில் பல்துறை சாதனையாளர்களுக்கும் விருதுகளை வழங்கி அவர் பேசுகையில்,
மத்திய சுகாதாரத்துறை கடந்த 5 ஆண்டுகளாக 4 முக்கிய தீமைகளை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம் நடத்தி வருகிறது. புகை, மது, நொறுக்குத் தீனி, போதைப் பழக்கங்களை எதிர்த்து டாக்டர் ராமதாசின் ஆலோசனையின் பேரில் போர் நடத்தி வருகிறோம்.
தமிழகத்தின் இளைஞர்களை மதுப் பழக்கத்தில் இருந்து காப்பாற்றும் சூழல் உருவாகி இருக்கிறது.
புகைப் பழக்கத்துக்கு உலகில் 50 லட்சம் பேர் இறக்கின்றனர். அவர்களில் 10 லட்சம் பேர் இந்தியர்கள். இளைஞர்களை இந்த பழக்கத்தில் இருந்தும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்து சட்டம் கொண்டு வந்தோம். அதை பல மாநிலங்கள் வெற்றிகரமாக அமல்படுத்தி வருகின்றன.
திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளை 3 ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்தோம். அதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்தது. கடந்த அக்டோபர் 2ம் தேதியிலிருந்து பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதித்தோம். இந்த சட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
இனி வரும் காலத்தில் எந்த சினிமாவிலும் புகை பிடிக்கும் காட்சி இடம் பெறக் கூடாது என்ற நிலை உருவாகும். ஏனென்றால், சினிமா சினிமா சூட்டிங் எடுக்கும்போது அந்த இடத்தில் டைரக்டர், கேமிராமேன், லைட்மேன் என்று பலர் இணைந்து பணியாற்றுவதால் அதுவும் பொது இடமாகத்தான் கருதப்படும். பொது இடத்தில் இந்த காட்சிகளை எடுக்கவும் கூடாது.
அப்படி காட்சி படமாக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். அந்த காட்சிகளை வெட்டி விடுவதற்கு தணிக்கைக் குழுக்களுக்கு நாங்கள் பரிந்துரை செய்ய இருக்கிறோம். இது சினிமாக்களுக்கு மட்டுமல்ல டி.விகளுக்கும் பொருந்தும் என்றார்.