For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதியின் பொங்கல்-தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து

By Sridhar L
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தைத் திங்கள் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் திருநாளாகக் கொண்டாடும் என் அருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும், இதயங் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தை திங்கள் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் திருநாளாக இந்த ஆண்டு முதல் கொண்டாடிடும் இனிய தமிழ்ச் சமுதாய மக்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

சாதி, மத, இன வேறுபாடு எதுவுமின்றி, உழைப்பைத் தந்து உதவியவர்களையும் எண்ணி உழவர் பெருங்குடி மக்கள் நன்றி தெரிவித்து வணங்கி மகிழும் இனிய திருவிழாவாக, மனித நேயம் வளர்க்கும் தமிழ்ச் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டினை உலகுக்கு உணர்த்திடும் மகத்தான திருவிழாவாக தைப் பொங்கல் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இத்திருவிழாவுடன் 1921ம் ஆண்டின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில், தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழறிஞர் பெருமக்கள் கூடி முடிவு செய்து அறிவித்தபடி தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் எனச் சட்டம் இயற்றப்பட்டு, இந்த ஆண்டின் பொங்கல் திருநாள் முதன் முதலாக 'தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் திருநாளாக' மிகுந்த எழுச்சியோடு கொண்டாடப்படுகிறது.

திமுக அரசு அமையும்போதெல்லாம் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகின்றன. குறிப்பாக உணவுப் பொருள்களை விளைவித்து உலகத்தார்க்கு அச்சாணியாகத் திகழும் உழவர் பெருமக்கள் உயர்ந்திட கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடி புதிய பயிர்க் கடன்களுக்கு வட்டி விகிதம் 9 விழுக்காடு என்பது 4 விழுக்காடாகக் குறைப்பு,

கரும்புக்கும் நெல்லுக்கும் கூடுதல் விலைகள், பயிர்க் காப்பீடு திட்டம், நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம், விவசாயத் தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத் திட்ட உதவிகள் எனப் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், ஆகியோர் அறிவுறுத்திய நெறியில் தமிழ் மொழி, இன, மான பண்பாட்டு உணர்வுகளைப் போற்றி வளர்த்திடும் விழைவோடு பூம்புகாரில் சிலப்பதிகாரச் சிற்பக் கலைக்கூடம், சென்னையில் வள்ளுவர் கோட்டம், கொல்லி மலையில் வல்வில் ஓரி சிலை, குமரிமுனையில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை என்றெல்லாம் அமைத்துள்ளோம்.

வரலாறு படைத்துள்ள தமிழறி ஞர்களுக்கும், தமிழ் மன்னர்களுக்கும், மாவீரர்களுக்கும் தமிழகம் முழுவதும் திருவுருவச் சிலைகளும், மணி மண்டபங்களும் அமைத்துச் சிறப்புகள் செய்துள்ளோம்.

அந்த வரிசையில் தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் திருநாளைத் தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் உவகை பொங்கிடக் கொண்டாடி மகிழ்ந்திட வேண்டும் என்பதற்காக, அந்த மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளும் நோக்கில் தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சர்க்கரைப் பொங்கல் தயாரிப் பதற்குத் தேவைப்படும் பொருள்களான அரை கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம், பாசி பருப்பு 100 கிராம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை 20 கிராம் அடங்கிய பை வழங்கப்பட்டுள்ளது.

"பத்தன்று; நூறன்று; பன்னூறன்று;
புத்தாண்டு, தைம்முதல் நாள், பொங்கல் நன்னாள்!''

எனப் புரட்சிக் கவிஞர் பாடியதற்கேற்ப மங்கிக் கிடந்திடும் பழந்தமிழ் மரபுகள் பொங்கிப் பெருகி எங்கும் தழைத்திடல் வேண்டும் என்னும் உணர்வோடு இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தைத் திங்கள் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் திருநாளாகக் கொண்டாடும் என் அருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும், இதயங் கனிந்த நல்வாழ்த்துக்களை மீண்டும் உரித்தாக்குகிறேன்!

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X