ஷேர் நஷ்டம் - தாயின் சமாதியில் தொழிலதிபர் தற்கொலை
தூத்துக்குடி: பங்குச் சந்தையில் போட்ட முதலீடுகள் பெரும் இழப்பை சந்தித்ததால் மனம் உடைந்த வர்த்தகர், தனது தாயின் சமாதியில் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி எழில் நகரை சேர்ந்தவர் தனசேகரன். லாட்டரி தொழில் செய்து வந்த தனசேகரன், லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டதால் பங்கு சந்தையில் முதலீடு செய்தார்.
பங்கு சந்தை வீழ்ச்சி காரணமாக தனசேகரனுக்கு பெருந்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பல லட்ச ரூபாய் அளவில் கடன் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி சண்முக புரத்தில் உள்ள தங்களது பூர்வீக வீட்டை விற்று கடனை அடைக்க முடிவு செய்தார். இதற்கு அவரது மனைவி ரோசம்மாள் ஆட்சேபனை தெரிவித்தார்.
இதனால் மனமுடைந்த தனசேகரன் தூத்துக்குடி மையவாடியில் உள்ள தனது தாயார் சமாதியில் விஷம் குடித்து விட்டு அருகிலேயே படுத்துக் கொண்டார்.
சில நிமிடங்களில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரே எழுந்து அரசு மருத்துவமனைக்கு சென்று விஷம் குடித்தது பற்றி கூறினார்.
இதையடுத்து டாக்டர்கள் சிகிச்சை செய்யத் தயாரானார்கள். ஆனால் தனசேகரன் உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் விசாரணை நடத்தி வருகிறார்.