மங்களூர் அநாகரீகம்: ஸ்ரீராம் சேனா தலைவர் கைது - மன்னிப்பு கேட்டார்
டெல்லி: மங்களூர் ஹோட்டல் ஒன்றில் புகுந்து அங்கு நடனமாடிக் கொண்டிருந்த பெண்களை வெறித்தனமாக தாக்கிய சம்பவத்தை அடுத்து ஸ்ரீராம் சேனா அமைப்பு தலைவர் பிரமோத் முத்தலிக் உள்ளிட்ட மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு முத்தலிக் மன்னிப்பு கோரியுள்ளார்.
மங்களூரில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சனிக்கிழமை இரவு ஸ்ரீராம் சேனா என்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்று அங்கு பப்பில் நடனமாடிக் கொண்டிருந்த பெண்களை கண்மூடித்தனமாக தாக்கினர்.
இவர்களின் வெறித்தனமான தாக்குதல் தேசிய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரிக்க 3 பேர் அடங்கிய விசாரணைக் குழுவை தேசிய மகளிர் ஆணையம் நியமித்துள்ளது.
இதற்கிடையே, இந்த வழக்கில் ஸ்ரீராம் சேனா அமைப்பின் துணைத் தலைவரான பிரசாத் அட்டவார் உள்ளிட்ட மேலும் 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தினகர் ஷெட்டி என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பெல்காமில் ஒரு கூட்டத்தில் பேசி கொண்டிருந்த அவ்வமைப்பின் தலைவர் முத்தலிக்கை நேற்று போலீசார் கைது செய்தனர்.
அவரை இபிகோ சட்டப்பிரிவு 153ன் படி கைது செய்துள்ளோம் என பெல்காம் போலீஸ் சூப்பிரடண்டு சோனியா நரங் தெரிவித்துள்ளார். இவரையும் சேர்த்து இதுவரை 32 பேர் கைதாகியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட முத்தலிக் கூறுகையில், எங்கள் அமைப்பினரின் நடவடிக்கைக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால், நிர்வாணமாக ஆடுவதும், போதை ஊசிகள் பயன்படுத்துவதும் தவறானது.
காதலர் தினத்துக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். பப் கலாச்சாரத்தை எதிர்க்கிறோம். நமது கலாச்சாரத்தில் பெண்களை தாயாக நினைத்து வணங்குகிறோம்.
இது சின்ன நிகழ்வு தான். பத்திரிகைகள் அதை ஊதி பெரிதாக்கிவிட்டன என்றார் அவர்.