சீன செருப்பில் தேசிய கொடியின் வண்ணம்; செங்கோட்டை நகராட்சி கண்டனம்
செங்கோட்டை: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செருப்புகளில் நமது தேசிய கொடியின் வண்ணம் இடம்பெற்றுள்ளதை கண்டித்து செங்கோட்டை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
செங்கோட்டை நகராட்சி கூட்டம் நகராட்சி அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் ரகீம் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் அசோக் குமார், மேலாளர் ஷாஜகான், துணை தலைவர் ஆதிமூலம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் துணை தலைவர் ஆதிமூலம் பேசுகையில்,
நகராட்சி சார்பில் நடக்கும் தேசிய விழாக்களில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செருப்புகளில் நமது தேசிய கொடியின் வண்ணம் இடம்பெற்றுள்ளது. நமது நாட்டை அவமதித்த சீனாவை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார் அவர்.
சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழாவில் அனைத்து கவுன்சிலர்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என செல்வகணேசன் வலியுறுத்தினார்.
சீன செருப்பை இறக்குமதி செய்ய பிரதமர், வர்த்தத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் எப்படி அனுமதிக்கலாம். அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர் என வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.