கடற்கரை காந்தி சிலை அருகே தமிழர் பாதுகாப்பு இயக்கம் போராட்டம் நடத்த தடை
சென்னை: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று நடைபெறவுள்ள கருப்புக் கொடி ஏந்தி, மெளன விரதம் நடத்தும் போராட்டத்தை கடற்கரை காந்தி சிலை அருகே நடத்த காவல்துறை தடை விதித்துள்ளது.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக இன்று சென்னை காமராஜர் சாலை, காந்தி சிலைக்கு முன்னால் மவுன விரதப் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு உள்ளார்கள். ஆனால் இந்த இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என காவல்துறை அறிவித்துள்ளது.
இத்தகைய போராட்டங்களை நடத்துவதற்காக அனுமதிக்கப்படுகின்ற இடங்களில் ஒன்றாக காந்தி சிலைக்கு அருகில் உள்ள இடம் இல்லை என்பதாலும், 30-ந் தேதி காந்தி மறைந்த நாள் என்பதாலும்,இந்தப் போராட்டத்தை வேறொரு அனுமதிக்கப்பட்ட இடத்தில் நடத்திக்கொள்ளலாம் என்று காவல் துறை சார்பில் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, அவர்களிடமிருந்து முறைப்படி அனுமதிக்கப்பட்ட இடம் கோரி விண்ணப்பிக்கப்படுமானால், இந்த மவுன விரதப் போராட்டம் நடத்திட காவல் துறை அனுமதிக்கும்.
காவல் துறை ஆணையை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனறு ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திரண்டு வருக - நெடுமாறன்
இதற்கிடையே, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை தமிழனத்தையே அழித்து ஒழிக்கும் வெறிகொண்டு சிங்கள ராணுவம், தமிழ் மக்கள் மீது ஏவுகணையை ஏவியும் குண்டுகள் வீசியும் கொன்று குவித்து வருகிறது. நாளுக்கு நாள் அங்கிருந்து வரும் செய்திகள் நமது நெஞ்சங்களை பிளக்கின்றன.
இந்திய அரசோ போர் நிறுத்தத்தை வலியுறுத்தாமல் காலம் கடத்தும் தந்திரத்தை கையாண்டு சிங்கள அரசுக்கு துணை போகிறது. இந்த நிலையில், இலங்கை தமிழர்களை பாதுகாக்க முன்வரும்படி தமிழ் நாட்டிலுள்ள அனைத்து அமைப்புகளையும் அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு முன்பாக கறுப்பு கொடி ஏந்தி மவுனவிரத போராட்டம் நடைபெறுகிறது.
இப்போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து தமிழர் அமைப்புகள் மற்றும் தொழிலாளர், விவசாயிகள், மகளிர், இளைஞர் மாணவ அமைப்புகள் மற்றும் அனைத்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு தமிழ் மக்களின் ஒட்டு மொத்த வேதனையை வெளிப்படுத்த முன்வருமாறு அனைவரையும் வேண்டி கொள்கிறேன் என்று கோரியிருந்தார்.
காந்தி சிலை அருகே போராட்டம் நடத்த அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டிருப்பதால் வேறு இடத்திற்குப் போராட்டம் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications