முத்துக்குமாருக்கு தமிழக அரசு நிதி - நிராகரித்தது குடும்பம்
சென்னை: தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த ரூ. 2 லட்சம் நிதியுதியை அவரது குடும்பத்தினர் நிராகரித்து விட்டனர். பணம், பொருள் கொடுத்து தங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என முத்துக்குமாரின் தங்கை கணவர் கூறியுள்ளார்.
சட்டசபையில் நேற்று அமைச்சர் மு.க.ஸ்டாலின், தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்தார்.
இந்த உதவியை முத்துக்குமாரின் தங்கை கணவர் கற்குவேல் ஏற்க மறுத்து விட்டார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு அறிவித்த ரூ.2 லட்சம் நிவாரண உதவி தொகை எங்களுக்கு வேண்டாம். தமிழ் மக்கள் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் தான் முத்துக்குமார் உயிரை விட்டார். அதற்காக எங்களுடைய குடும்பம் சந்தோஷம் அடைகிறது.
பணம் - பொருள் கொடுத்து எங்களை கொச்சைப்படுத்த வேண்டாம். தனி நபருடைய உணர்வு தான் இது, அரசியல் சம்பந்தப்பட்டதல்ல.
தீக்கிரையாகியதை தொடர்ந்து இப்போது வரை பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்கள் உணர்வுகளை தெரிவித்தனர்.
இறுதிச் சடங்கில், தமிழ் உணர்வாளர்களும் நெருங்கிய உறவினர்களும் அதிகம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.