பந்த்தின்போது சிறிதளவும் வன்முறை கூடாது: பழ. நெடுமாறன்
சென்னை: பிப்ரவரி 4ம் தேதி நடத்தப்படும் பொது வேலைநிறுத்தத்தின்போது சிறிதளவும் வன்முறை நிகழ்ந்து விட இடம் தரக் கூடாது என இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் உடனடியாக போர்நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு, அப்பாவி தமிழர்களின் உயிர்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 4-ந் தேதி பொதுவேலை நிறுத்தம் மேற்கொள்ளும்படி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது சட்டவிரோதமானது என தமிழக அரசு தவறான பிரசாரம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.
உச்சநீதிமன்றம் பந்த்' செய்வதற்கு எதிராக கூறியுள்ள கருத்தினை திரித்து கூறி மக்களை மிரட்டுவதற்கு தமிழக அரசு முயல்கிறது.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பிறகுதான் மேற்கு வங்காளத்திலும், கேரளத்திலும் சுயவேலை மறுப்பு போராட்டங்களும், கடையடைப்பு போராட்டங்களும் நடந்திருக்கின்றன என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு சுட்டி காட்ட விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், மாணவர்கள், திரைப்பட துறையினர் உள்ளிட்ட அனைத்து தமிழர்களும் 4-ந்தேதி அன்று தங்களுக்கு தாங்களே சுயவேலை மறுப்பு செய்து, தங்கள் இல்லங்களிலேயே இருக்குமாறு பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அனைத்து தமிழர்களும் பொது வேலைநிறுத்தம் வெற்றிபெற துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
போராட்டங்களின் போது எந்த இடத்திலும் சிறு அளவு வன்முறை ஏற்படாமலும், பொதுச்சொத்துகளுக்கு சேதம் இல்லாமலும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications