திருப்பதி கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருப்பதி: திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி உள்பட நாட்டின் முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு ஏற்கனவே மிரட்டல் இருப்பதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான அலுவலகத்திற்கு நேற்று காலை பேக்ஸ் மூலம் மிரட்டல் கடிதம் வந்தது.
அதில், திருமலைப் பகுதியில் அன்னிய மத பிரசாரத்திற்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இது நீடிக்குமானால், 12ம் தேதிக்குள் திருமலை, திருப்பதி தேவஸ்தானம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று மிரட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து கோவிலுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு தேவஸ்தானம் சார்பில் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திருப்பதி கோவிலுக்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆயுதம் தாங்கிய போலீஸார், வெடிகுண்டுகளை கண்டறியும் நிபுணர் படையும் குவிக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய்கள் மூலம் சோதனையும் நடத்தப்பட்டது. இருப்பினும் குண்டு எதுவும் சிக்கவில்லை.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் கோவிலுக்கு வருவோர் சோதனையிடப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications