ராஜபக்சே கட்சியில் கருணா!
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பையும், பின்னர் அதைக் கட்சியாகவும் மாற்றி, இலங்கை அரசுக்கு சாதகமாக இயங்கி, அவர்களது பாதுகாப்பின் கீழ் இருந்து வரும் கருணா, அக்கட்சியிலிருந்து இப்போது விலகி விட்டார். ராஜபக்சே கட்சியில் சேரப் போகிறார்.
கருணாவுக்கும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையானுக்கும் இடையே முற்றியுள்ள பனிப்போரே இதற்குக் காரணம்.
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஆரம்பித்த கருணா, பின்னர் இடையில், இலங்கையிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் லண்டனுக்குப் போனார்.
அந்த சமயத்தில் கட்சி பிள்ளையான் கைவசம் வந்தது. பின்னர் லண்டனில் சிறைத் தண்டனையை முடித்து விட்டு கருணா இலங்கைக்குத் திரும்பினார். ஆனால் கட்சி அப்படியே பிள்ளையான் கைக்கு மாறிப் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரை சமாதானப்படுத்திய ராஜபக்சே அரசு கருணாவுக்கு எம்.பி பதவியை அளித்து குளிர்வித்தது. ராஜபக்சேவின் சுதந்திரா கட்சியின் சார்பில்தான் எம்.பியாகியுள்ளார் கருணா.
இந்த நிலையில் சமீப நாட்களாக கருணாவுக்கும், பிள்ளையானுக்கும் இடையிலான பனிப்போர் முற்றி விட்டது.
பிள்ளையான் கிழக்கு மாகாணத்தின் முதல்வராக இருக்கிறார். சமீபத்தில் பிள்ளையானை கடுமையாக விமர்சித்துப் பேசினார் கருணா.
இதையடுத்து கட்சி சார்பில் கருணாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நேற்று அவரை அவகாசமும் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் கருணா பதிலளிக்கவில்லை. மாறாக கட்சியை விட்டு விலகி விட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நானும், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி இருக்கிறோம். நாங்கள் சுதந்திரா கட்சியில் சேரப் போகிறோம். ஒரு வாரத்தில் அதிபர் ராஜபக்சேயை சந்தித்து பேச இருக்கிறேன்.
சுதந்திரா கட்சியி்ல் இணைந்த பிறகு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அலுவலகம் அனைத்தையும் சுதந்திரா கட்சி அலுவலகமாக மாற்றுவோம்.
கட்சியில் பெரும்பாலோர் எனக்கு ஆதரவாக உள்ளனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இனி பிள்ளையானும் அவரது ஆதரவாளர்களும் மட்டுமே இருப்பார்கள் என்று கூறியுள்ளார் கருணா.
ஆனால் கருணா சுதந்திரா கட்சியில் சேருவதற்கு முன்பாகவே அவரை கட்சியிலிருந்து தூக்கி விட பிள்ளையான் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, கருணாவுக்கு ராஜபக்சே அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.