தமிழர்களை அழிக்கும் ஆவடி டாங்குகள்- தா.பா
வேதாரண்யம்: இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ரேடார்கள், டாங்குகள் ஆகியவற்றைத்தான் இலங்கை ராணுவம் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நடந்த சிபிஐ நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் தா.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், இலங்கை ராணுவம் விமானங்களை வேவு பார்க்க பயன்படுத்தும் ரேடார் கருவிகள் இந்தியா அளித்தது. போரில் பயன்படுத்தப்படும் டாங்குகள் தமிழகத்தில் உள்ள ஆவடியில் தயாரிக்கப்பட்டவையாகும்.
போர் நடைபெறும் பகுதியில் 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் இருப்பதாக வன்னிப் பகுதி ஆட்சியர் கூறுகிறார். ஆனால், ராஜபக்சேவோ 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் இருப்பார்கள் என்கிறார்.
போர் நிறுத்தத்துக்குப் பிறகு, இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து கூறுவதற்காகவே திட்டமிட்டுச் செயல்படுகிறார் ராஜபக்சே. இதற்கு இந்தியாவும் உடந்தையாக உள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தில் ராஜக்சே மற்றும் அவரது சகோதரர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும் காலம் விரைவில் வரும் என்றார் தா.பாண்டியன்.












Click it and Unblock the Notifications