குற்றாலம் மலையில் தீ-பல ஏக்கர் காடு சாம்பல்
குற்றாலம்: குற்றாலம் மலைப் பகுதியில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
குற்றாலத்திலிருந்து செண்பகாதேவி அருவி்க்கு செல்லும் வழியில் புதுமொட்டை பகுதியில் நேற்று மாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் குற்றாலம் வனச்சரகர் சாமுவேல் ராஜன், வனவர் தார்ச்சீஸ் ஆகியோர் தலைமையி்ல் சுமார் 30க்கும் மேற்பட்ட வனக்காலவர்கள், தீ தடுப்பு பயிற்சி பெற்றவர்கள் ஆகியோர் விரைந்து சென்றனர்.
ஒரு மணி நேரம் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இதில் பல ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள காய்ந்த புற்செடிகளும், மரங்களும் எரிந்து சாம்பலானது.
இதுகுறித்து குற்றாலம் வனச்சரகர் கூறுகையில்,
கோடைகாலம் தொடங்கிவிட்டதால் மலையின் உயரம் குறைந்த பகுதிகளில் உள்ள புற்செடிகள், சிறிய ரக மரங்கள் போன்றவை நன்கு காய்ந்துள்ளன. இவை எளிதில் தீப்பற்றக் கூடியநிலையில் இருக்கின்றன.
மலைப்பகுதிக்கு செல்கிறவர்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்லாமல் வனத்துறைக்கு முழு ஓத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.