நாகர்கோவில் அருகே போலி பெண் போலீஸ் கைது
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பணகுடியில் போலீஸ் வேஷமிட்டு மிரட்டிய பெண் கைது செய்யப்பட்டார்.
நாங்குநேரி அருகே பட்டர்புரத்தை சேர்ந்த திருபாதம் மகன் மகேஷ். கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜீவா, குடும்ப பிரச்சனை காரணமாக கணவரை பிரிந்து பணகுடியில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ஜீவாவை பார்க்க நேற்று மகேஷ் பணகுடி வந்துள்ளார். அப்போது நெருஞ்சி காலனியில் ஜீவாவின் அக்காள் கணவர் சேகர் ஒரு பெண் போலீசுடன் வந்து அவரை வழிமறித்து, மிரட்டியுள்ளார்
அந்த பெண் போலீஸ் மகேஷீடம் ஜீவாவுடன் ஓழுங்காக சேர்ந்து குடும்பம் நடத்து, இல்லாவிட்டால் வழக்கு போட்டுவிடுவேன் என கூறியுள்ளார். இதில் தனது சகளை சேகருடன் வந்த பெண் போலீஸ் மீது மகேசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பணகுடி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயராஜ் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அந்த பெண் நெருஞ்சியை சேர்ந்த இசக்கியப்பன் மனைவி தெரசா என்பதும், அவர் போலீசில் பணிபுரியும் தனது தம்பி உடையை அணிந்து கொண்டு வந்து மகேஷை மிரட்டியதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இது தொடர்பாக சேகரை தேடி வருகின்றனர்.