For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதிக்கு நாளை தையல் பிரிப்பு

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: முதுகு தண்டுவடப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கருணாநிதிக்கு நாளை தையல் பிரிக்கப்படுகிறது. இதையடுத்து சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று தெரிகிறது.

இது குறித்து மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

முதல்வர் கருணாநிதியின் முதுகுத் தண்டில் எல்2-எல்3 இவற்றுக்கிடையே தசைப்பிடிப்பு இருப்பதை அறிந்து அதற்கு அறுவை சிகிச்சை செய்வது தான் சரியான தீர்வு என்று மருத்துவக் குழுவினர் முடிவு செய்தனர்.

டெல்லியில் இருந்து டாக்டர் அரவிந்த் ஜெயஸ்வாலை வரவழைத்து முதல்வரை பரிசோதிக்கச் செய்தோம். ராமச்சந்திரா மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மார்த்தாண்டம் தலைமையில் 14 டாக்டர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 11ம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது.
மூன்றரை மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் முதல்வரின் முதுகு வலி நீங்கியது.

அறுவை சிகிச்சைக்கு பின் செய்யப்பட வேண்டிய சிகிச்சைகள் அனைத்தும் முழுமையாக நடைபெற்று அவரது உடல்நிலை தேறி வந்தது. அறுவை சிகிச்சையின் போது போடப்பட்ட ஐந்து தையல்களில் நேற்றைய தினம் இரண்டு தையல்கள் பிரிக்கப்பட்டு விட்டன. இன்னும் மூன்று தையல்கள் பிரிக்கப்பட வேண்டும்.

நாளை டெல்லியிலிருந்து டாக்டர் ஜெய்ஸ்வால் மீண்டும் சென்னைக்கு வருகிறார். அப்போது எஞ்சிய மூன்று தையல்களும் பிரிக்கப்பட உள்ளன. அதன் பின்னரே முதலமைச்சர் இல்லம் திரும்புவது பற்றி முடிவு செய்ய வேண்டும்.

இதற்கிடையே வெளியே நடைபெறும் அரசியல் சூழ்நிலைகள் முதல்வரை மனோரீதியாகப் பெரிதும் பாதிப்பதும், அந்தப் பிரச்சனைகளிலே அவர் அதிக அக்கறை செலுத்துவதும், ஓய்வெடுக்காமல் அதைப் பற்றியே அதிகாரிகளையும், கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேசுவதும், திடீரென்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருப்பதும் நன்றாக தேறி வருகின்ற அவரது உடல் நிலையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தை எங்களிடையே தோற்றுவித்துள்ளது.

எனவே அவர் மேலும் சில நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்டு உடல் நலம் முழுவதுமாக தேறிய பின்னர் உண்ணாவிரதம் பற்றி யோசித்து முடிவெடுப்பது உசிதமாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

இது அவருடைய உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முடிவெடுக்க வேண்டிய பிரச்சனை என்பதால் இதில் அவரோடு சேர்ந்து அரசியல் தொண்டாற்றுகிற அவரது நெருங்கிய நண்பர்கள்தான் பொறுப்பேற்று அவரை நல்ல முடிவெடுக்கத் தூண்ட வேண்டும்.

எங்களுக்கும் மேலாக, எங்களையும் கடந்து தரப்படக் கூடிய நல்ல மருந்தாக அதுதான் இருக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

இப்போது பிசியோதெராபி சிகிச்சை பெற்று வரும் முதல்வர் தினமும் சக்கர நாற்காலியில் மருத்துவமனையை வலம் வருகிறார். மாலை நேரங்களில் ராமச்சந்திரா மருத்துவமனை பூங்காவுக்கு தனது குடும்பத்தினருடன் சக்கர நாற்காலியில் சென்று வருகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X