வரி சலுகைகள்-பங்குச் சந்தையில் சாதகமான நிலை!
மும்பை: இந்தியப் பங்குச் சந்தை இன்று ஆறுதல் தரும் விதத்தில் ஆரம்பமாகியுள்ளது. எடுத்த எடுப்பிலேயே 134 புள்ளிகளைக் கூடுதலாகப் பெற்ற சென்செக்ஸ், பிற்பகலுக்குப் பின் வலுவான நிலைக்கு வந்தது.
சர்வதேச அளவில் நிறுவனங்கள் தங்கள் மறுமுதலீட்டுக்காக நிதி திரட்டுவதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய பங்குச் சந்தை நிலவரம் சற்றே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தைகளில் நேற்றைய சரிவை ஈடுகட்டும் விதத்தில் முன்னேற்றம் தெரிந்தது.
சென்செக்ஸில் இன்று வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களில் 134 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ், பிற்பகலுக்குப் பின் 154 புள்ளிகளாக உயர்ந்தது.
இப்போது 8991.45 என்ற நிலையில் உள்ள சென்செக்ஸ் 9,000 புள்ளிகளைத் தாண்டாதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேசிய பங்குச் சந்தை நிப்டி 51 புள்ளிகள் உயர்ந்தது. வியாழனன்று புதிய நிதி வரத்துக்கு வாய்ப்பு இருக்கும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் இருப்பதால் நாளையும் நல்ல முன்னேற்றம் இருக்கும் என நம்புகிறார்கள். இவற்றையெல்லாம் விட, நேற்று மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.29 ஆயிரம் கோடி புதிய வரிச்சலுகைகள் ஒரு புதிய நம்பிக்கை அலையை தொழில்துறையில் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஆட்டோமொபைல்ஸ் துறைப் பங்குகளில் வரும் நாட்களில் நல்ல உயர்வு காணப்படும் எனத் தெரிகிறது. கார்களுக்கு புதிதாக வரிச்சலுகை இல்லாவிட்டாலும், கமர்ஷியல் வாகனங்களுக்கு 2 சதவிகித வரி குறைப்பை அரசு அறிவித்துள்ளது, அந்தத் துறை உற்பத்தியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தியுள்ளது.