உயர்நீதிமன்றம் திறக்கப்பட்டது - நாளை சிட்டி சிவில் கோர்ட் திறப்பு
சென்னை: போலீஸார், வக்கீல்கள் மோதலைத் தொடர்ந்து மூடப்பட்ட சென்னை உயர்நீதி்மன்றம், மதுரை கிளை ஆகியவை இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கின.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை சிட்டி சிவில் கோர்ட், தீர்ப்பாயங்கள் ஆகியவை மார்ச் 2ம் தேதி முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19-ந் தேதி வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கோர்ட்டுகளும் அடுத்தநாள் மூடப்பட்டன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோர்ட்டுகள் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டன. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை ஆகியவை இன்று முதல் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை சென்னை உயர்நீதிமன்றமும், மதுரை உயர்நீதிமன்றக் கிளையும் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படத் தொடங்கின.
இருப்பினும் வக்கீல்கள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். மேலும், மத்திய, மாநில அரசுகளுக்காக வாதாடி வரும் 7 வக்கீல்கள் காவல்துறைக்குக் கண்டனம் தெரிவித்து தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
தங்களது கோரிக்கைககள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என வக்கீல்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிட்டி சிவில் கோர்ட், சிறு வழக்குகளுக்கான நீதிமன்றம், பல்வேறு தீர்ப்பாயங்கள் ஆகியவை மார்ச் 2ம் தேதி முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை உயர்நீதிமன்றப் பதிவாளர் மாலா நேற்று வெளியிட்டிருந்தார்.
இந்த ஆண்டு இதுவரை சென்னை உயர்நீதிமன்றம் மொத்தமே 10 நாட்கள்தான் செயல்பட்டுள்ளது. இதில் ஜனவரி மாதம் 9 நாட்களும், பிப்ரவரியில் ஒரு நாளும் மட்டுமே இயங்கியுள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வக்கீல்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 19ம் தேதி மீண்டும் கோர்ட்டுக்குத் திரும்பவிருந்தனர். இந்த நிலையில்தான் அன்று சுப்ரமணியம் சுவாமி மீது முட்டை வீசிய வக்கீல்களை போலீஸார் கைது செய்து அழைத்துச் செல்ல முயன்றபோது வன்முறை வெடித்தது. அன்று முதல் உயர்நீதிமன்றம் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications