பெர்லின், சிட்னியில் தமிழர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

பெர்லின்: இலங்கை அரசின் தமிழினப் படுகொலைக்கு ஆதரவாக உள்ள அரசுகளின் துணைத் தூதரகங்கள் முன்பு ஜெர்மனி வாழ் தமிழர்கள் பிரமாண்ட முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர்.

டுசில்டோவ் நகரில் அமைந்துள்ள இணைத் தலைமை நாடுகளின் துணைத் தூதரகங்கள் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 1 மணி முதல் இந்த போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர்.

டுசில்டோவ் தொடருந்து நிலையத்தின் வாயிலில் ஒன்றுகூடிய தமிழர்கள் முதலில் அமெரிக்கத் துணைத் தூதரகம் நோக்கிப் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

டுசில்டோவ் அமெரிக்கத் துணைத் தூதரகத்தினால் மனு வாங்குவதற்கு நேரம் ஒதுக்கப்பட்ட போதும், பின்னர் அவர்கள் மனு வாங்க மறுத்ததால் கொதிப்படைந்த தமிழர்கள் தூதரகத்தின் அதிகாரிகள் வந்து மனுவை வாங்காவிட்டால் நாங்கள் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என தெரிவித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இதையடுத்து அமெரிக்க துணைத் தூதரக செயலாளர் மனுவினைப் பெற்றுக் கொண்டார். மனுவினை தமிழர்கள் சார்பில் அருட்தந்தை ஆண்டனி பாலா வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் மக்களின் கண்டனப் பேரணி ஜப்பானிய துணைத் தூதரகத்தை சென்றடைந்தது.

தமிழர்களைச் சந்திக்க விரும்பாத ஜப்பானிய துணைத் தூதரகம் அதற்கான நேரத்தை ஏற்கனவே ஒதுக்கித்தர மறுத்திருந்தது.

எனினும் அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தை ஜெர்மனி காவல்துறையினர் ஜப்பானிய துணைத் தூதரகத்தில் தெரிவித்தனர். இதையடுத்து தமிழர் பிரதிநிதிகளிடமிருந்து மனுவைப் பெற்றுக் கொண்டனர் ஜப்பானிய தூதரக அதிகாரிகள்.

அந்த சமயத்தில், தமிழ் இளைஞர்கள் சிலர் இலங்கைக்கான ஜப்பானிய சிறப்புத் தூதர் யசூசி அகாசியின் படத்தின் மீது முட்டைகளை வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போராட்டம் பிரிட்டன் தூதரகத்தை அடைந்தது. தமிழர்கள் உறுதியுடனும், கோபத்துடனும் வருவதை அறிந்து, தூதரக வாயிலில் அதிக அளவிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

துணைத் தூதரகம் முன்பாக ராஜபக்சேவின் கொடும்பாவியும், இலங்கை தேசிய கொடியும் தீவைத்து எரிக்கப்பட்டன.

இச்சம்பவங்களைத் தொடர்ந்து பிரித்தானிய துணைத் தூதரக அதிகாரிகளிடம் அருட்தந்தை கலாநிதி எஸ்.ஜே.இமானுவல் அடிகளார் மனுவினை அளித்தார்.

அதன் பின்னர் துணைத் தூதரகம் முன்பு பல்வேறு தலைவர்கள் பேசினர்.

சிட்னியில் தமிழர்கள் போராட்டம்:

இலங்கையில் ராணுவம் நடத்தி வரும் இன அழிப்பை விவரித்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

சிறிலங்கா படையினரின் கொடூர எறிகணைத் தாக்குதல்களில் இன அழிப்புக்கு உள்ளாகி வரும் தமிழ் மக்களை நினைவு கூர்ந்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

சிட்னியில் உள்ள மேலி பகுதியில் உள்ள பர்ரமட்டா என்ற இடத்தில் நடந்த இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டவர்கள் தமிழ் மக்களின் இன அழிப்பை எதிர்த்து தீக்குளித்து தீக்குளித்து இறந்த முத்துக்குமார் உள்ளிட்டோரை நினைவு கூர்ந்ததுடன் அவர்களுக்கு வணக்கத்தினையும் செலுத்தினர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட எழுத்தாளர் மாத்தளை சோமு, தமிழீழ மக்களின் அபிலாஷைகளை விளக்கி உரையாற்றினார்.

அத்துடன், சிட்னி தமிழ் மன்றத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும் தமிழ் இளைஞர்களும் வன்னி அவலத்தை உலக மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் உரையாற்றினர்.

வன்னி அவலத்தை உலக மக்களுக்கு எடுத்துக்காட்டும் முகமாக இங்கு ஒளிப்படக் காட்சியும் காண்பிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+