நீதிமன்ற கலவரம்: விசாரணையை தொடங்கிது ஸ்ரீகிருஷ்ணா கமிஷன்
ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான ஸ்ரீகிருஷ்ணா நேற்று இரவு சென்னை வந்து சேர்ந்தார். இன்று காலை தனது விசாரணையைத் தொடங்கினார்.
கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு நீதித்துறை அகாடமியில் இதற்காக தனி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் தனது விசாரணையை தொடங்கினார்.
அவரிடம் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ், முன்னாள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பல்வேறு வக்கீல்கள் சங்கப் பிரதிநிதிகள் வாய்மொழியாக நடந்ததை விவரித்தனர்.
இவர்களைத் தொடர்ந்து டிஜிபி, கமிஷனர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் நீதிபதியைச் சந்தித்து நடந்தது குறித்து விவரிக்கவுள்ளனர்.
இதையடுத்து மோதலில் காயமடைந்த இரு தரப்பினரிடமும் நீதிபதி விசாரணை நடத்துகிறார். மேலும் தாக்குதல் நடந்த உயர்நீதிமன்ற வளாகத்தை இன்றும், நாளையும் பார்வையிடவுள்ளார்.
இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளும் விசாரணையில் ஸ்ரீகிருஷ்ணாவுக்கு உதவுவர். இதற்காக சிபிஐ இணை இயக்குனர் அசோக்குமார், டிஐஜி கந்தசாமி ஆகியோரும், உயர் நீதிமன்றப் பதிவாளர்களில் ஒருவரும், சுருக்கெழுத்தாளர்களும் அவருக்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை வந்துள்ள நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். அவருக்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
விசாரணை நடைபெறவுள்ள ஜுடிசியல் அகாடமி வளாகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 வாரத்தில் தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்திடம் அவர் தாக்கல் செய்வார்.
சுப்பிரமணிய சாமி சொல்றார்...
இதற்கிடையே இந்த மோதல் ஆரம்பிக்க காரணமாக இருந்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உயர் நீதிமன்றத்தில் நடந்த சம்பவத்தை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து, போலீசார் நடத்திய தடியடி பிரயோகத்துக்கும், வக்கீல்கள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு மட்டும் வருத்தம் தெரிவித்தது.
கடந்த 17ம் தேதி கோர்ட்டுக்குள் என் மீது முட்டை வீசப்பட்ட சம்பவத்தில், 20 வக்கீல்களின் அநாகரீக நடவடிக்கை பற்றி உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கே.சந்துரு ஆகியோர் எழுத்துபூர்வமாகப் பதிவு செய்துள்ளனர் என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.
சென்னையில் நடக்கும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா விசாரணையின் போது, வக்கீல்களின் நடவடிக்கை பற்றி புகார் கொடுப்பதற்கு போலீசுக்கும் உரிமை உண்டு.
போலீஸ் அதிகாரி ஒருவரின் உடைகளை களைந்தது, பெண் போலீசாரிடம் தவறாக நடந்தது பற்றியும் போலீசார் புகார் தெரிவிக்கலாம்.
வக்கீலிகளில் நக்ஸலைட்டாம்..:
உண்மை நிலவரம் என்னவென்றால், வக்கீல்களுக்குள் நக்சலைட், விடுதலைச் சிறுத்தைகள், விடுதலைப் புலிகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 5 சதவீதம் பேர் ஊடுருவி உள்ளனர்.
இப்படிப்பட்டவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தி, அவர்களை வக்கீலாக பணியாற்ற தடை விதிக்க வேண்டும். ஜனநாயகத்தின் பிடியில் இருந்து அவர்கள் தப்பித்து ஓட விடக் கூடாது என்று கூறியுள்ளார் சாமி.