சத்யத்தால் சரிவில் சிக்கிய ஐடி நிறுவனம்!
டெல்லி: ப்ளாஷ் மெமரி கார்டு சப்ளை செய்வதில் உலகின் முன்னணி நிறுவனமாகத் திகழும் சான் டிஸ்க் நிறுவனம் உற்பத்தித் திறன் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது.
இதற்கு முக்கியக் காரணம் சத்யம் நிறுவனத்தில் இப்போது ஏற்பட்டுள்ள கோளாறுகள்தானாம். சத்யம் நிறுவனம்தான் சான் டிஸ்க் நிறுவனத்துக்கு ERP எனப்படும் 'தொழில் வள ஆதார திட்ட முறை'களை வகுத்துக் கொடுத்து வந்தது.
இந்த ERPதான் ஒரு நிறுவனத்தின் மூளையாகக் கருதப்படுகிறது. இந்த திட்டம் சரியாக இல்லாததே சான் டிஸ்க்கின் சரிவுக்குக் காரணம் என நாஸ்டாக் அறிவித்துள்ளது.
எனவே இந்த புதிய ERP முறையை விட்டுவிட்டு, ஏற்கெனவே நடைமுறை யில் உள்ள பழைய ERP-க்கு மாறிவிடப் போவதாக அமரிக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்புக்கு அறிக்கை அளித்துள்ளது சான் டிஸ்க்.
இந்த சான்டிஸ்க் நிறுவனத்தின் இன்டகரேட்டர் அதாவது ஒருங்கிணைப்பு நிறுவனமாக செயல்பட்டதும் சத்யம்தான். ஆனால் சத்யம் நிறுவனம் பெரும் சிக்கலில் உள்ளதால், சான் டிஸ்க்கின் அனைத்துப் பணிகளும் மிகவும் தாமதமாகி வருகிறதாம். டிஸ்க் உற்பத்தி தாமதமாவதுடன், நிறுவனத்தின் உற்பத்தித்திறனும் கணிசமாகக் குறைந்து நஷ்டத்தில் ஓடுகிறதாம் இந்த நிறுவனம்.
இதே நிலை தொடர்ந்தால் நிச்சயமாய் சத்யத்தைப் புறக்கணிப்போம், வேறு ஒருங்கிணைப்பு நிறுவனத்தை அணுகுவோம் என அறிவித்துள்ளது சான்டிஸ்க்.












Click it and Unblock the Notifications