தனி ஈழம்: உலக நாடுகள் உதவ பாமக கோரிக்கை
மணப்பாறை: தமிழ் ஈழம் மலர இனி இந்தியாவை நம்பி பயனில்லை. உலக நாடுகள்தான் அதற்கு துணைபுரிய வேண்டும் என்று பாமக எம்எல்ஏ வேல்முருகன் பேசினார்.
மணப்பாறையில் தமிழர் களம் மற்றும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் கூறியதாவது:
விடுதலைப் புலிகளை இந்தியா இனியும் எதிர்த்துக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. இந்திய இறையாண்மைக்கு தமிழர்கள் என்றைக்கும் பங்கம் விளைவித்தது இல்லை. இதுவரை 450 மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது. தன் சொந்த மக்களை அடுத்த நாட்டு ராணுவம் சுட்டு சாகடிப்பதை இந்தியா வேடிக்கைதான் பார்த்ததே தவிர, வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்குப் பெயர்தான் இறையாண்மையா? சிங்கள ராணுவம் இந்த நாட்டு மக்களைக் கொல்லும் போது எங்கே போனது உங்கள் இறையாண்மை?.
விடுதலைப் புலிகள் வெறும் போராளி இயக்கமல்ல. இலங்கையில் வாழும் அப்பாவித் தமிழர்களை கொத்துக் கொத்தாக குண்டு வீசி ராணுவம் கொன்று வருகிறது. விடுதலைப் புலிகள் நினைத்திருந்தால் 2,000 தமிழர்களின் உயிருக்கு விலையாக 2 லட்சம் சிங்களர்களைக் கூட கொன்றிருக்கலாம். செய்தார்களா?.
காரணம் புலிகள் தீவிரவாதிகள் அல்ல. சர்வதேச நாடுகள் இதை உணர்ந்து தமிழ் ஈழம் மலர உதவ வேண்டும்.
எத்தனை சோதனைகள் வந்தாலும் போராளிகள் தோற்க மாட்டார்கள். இன்றில்லாவிட்டால் நாளை அல்லது நாளை மறுநாள் ஐ.நா. மன்றத்தின் முன் தமிழ்க் கொடி பறக்கும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்.
இதில் தமிழர் களம் அமைப்பாளர் அரிமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் தனிச் செயலாளர் பாவலன், மாவட்டத் துணைச் செயலர் செல்வராசு, அகில உலக மாணவர் கூட்டமைப்பு பொறுப்பாளர் சங்கர், மணவைத் தமிழ்க் கழக நிறுவனர் தமிழ்நெறியன், கவிஞர் அறிவுச்செல்வன் உள்ளிட்டோரும் பேசினர்.