மக்களவை தேர்தல்-விருதுநகரில் வைகோ போட்டி?
சிவகாசி: வரும் மக்களவைத் தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விருதுநகர் தொகுதியில் போட்டியிடலாம் என்று தெரிகிறது.
வைகோ ஏற்கனவே சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் 2 முறை வென்றுள்ளார்.
கடந்த 1998ம் தேர்தலில் சிவகாசி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வைகோ 3.87 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், 1999ம் ஆண்டு திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு 3.25 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும் வைகோ வென்றார்.
கடந்த 2004ம் ஆண்டு தேர்தலிலும் இந்தத் தொகுதியில் வைகோ தான் போட்டியிடுவார் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில் திடீரென சிப்பிப்பாறை ரவிச்சந்திரனை நிறுத்திவிட்டு தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார்.
ஆனால், இம்முறை வைகோ போட்டியிட்டே ஆக வேண்டும் என மதிமுக நிர்வாகிகள் அவரை வற்புறுத்தி வருகின்றனர்.
தொகுதி சீரமைப்பின்படி சிவகாசி மக்களவைத் தொகுதி இப்போது நீக்கப்பட்டுவிட்டது. இந்தத் தொகுதி இணைக்கப்பட்டு விருதுநகர் மக்களவைத் தொகுதி என்ற புதிய தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகள் அனைத்திலுமே வைகோவுக்கு தனிப்பட்ட செல்வாக்கு உண்டு.
இதனால் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் வைகோ போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவரை வற்புறுத்தி வருகின்றனர்.
இந்தத் தொகுதியை மதிமுகவுக்கு அதிமுக ஒதுக்கித் தந்து அதில் வைகோ போட்டியிட்டால் அவரை எதிர்த்து திமுக சார்பில் மிக பலமான வேட்பாளர் இறக்கப்படலாம்.
அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தங்கையும், திமுக இளைஞரணிப் பொறுப்பாளருமான தமிழச்சி தங்கப்பாண்டியனை திமுக களமிறக்கலாம் என்று பேசப்படுகிறது.
இதற்கிடையே அதிமுக கூட்டணியில் மதிமுக 10 தொகுதிகளில் வரை கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த 10 தொகுதிகள் பட்டியலையும் அதிமுகவிடம் தந்துள்ளது.
ஆனால், மதிமுகவுக்கு 6 முதல் 7 தொகுதிகள் வரை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications