தேர்தல் விதிகளை மீறும் கட்சிகளுக்கு உடனே நோட்டீஸ்
டெல்லி: தேர்தல் விதிமுறைகளை மீறும் கட்சிகளுக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் ஏப்ரல் 16ம் தேதி தொடங்குகிறது. ஐந்து கட்டங்களாக நடைபெறும் தேர்தல் மே 13ம் தேதியுடன் முடிவடைகிறது. கடைசி கட்டமாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் 2-ந் தேதி வெளியிட்டது. அன்றே நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டது.
இந்த நிலையில், தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை தலைமைத் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. அதில் பல முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற தேர்தலை அமைதியாக நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தேர்தல் விதிமுறை மீறப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடவேண்டும்.
மாநில தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், கட்சி வாரியாக ரிஜிஸ்தர் தயாரிக்கவேண்டும். அதில், எந்தெந்த வேட்பாளர் அல்லது பிரச்சாரகர், என்ன முறையில், விதிமுறைகளை மீறி இருக்கிறார் என்பதை தினசரி தேதி வாரியாக பதிவு செய்யவேண்டும்.
அந்த பதிவுகளை பத்திரிகை நிருபர்களும், விருப்பம் உள்ள மற்றவர்களும் பார்க்கவும் வசதி செய்து கொடுக்க வேண்டும். அதன்மூலம் அரசியல் கட்சிகள் விதிமுறைகளை மீறாத வண்ணம் எச்சரிக்கையாக செய்யப்பட முடியும்.
எந்த ஒரு வேட்பாளருக்காகவும், எந்த ஒரு கட்சிக்காகவும், பிரசாரம் செய்ய வரும் தலைவர்களை கண்காணியுங்கள். அவர்கள் பேச்சில், விதிமுறை மீறல் உள்ளதா? என்று பாருங்கள். இருந்தால், உயர் தேர்தல் அதிகாரிக்கு தெரிவியுங்கள்.
இதைத்தொடர்ந்து, குறிப்பிட்ட கட்சிக்கும், அதன் வேட்பாளருக்கும் உடனே நோட்டீசு அனுப்பி வைக்க வேண்டும். கட்சி தலைவரோ, அதன் வேட்பாளரோ விதிமுறையை மீறும்பட்சத்தில் அவர்களுக்கு மட்டுமின்றி அந்த கட்சிக்கும் நோட்டீசு அனுப்பவேண்டும். ஒவ்வொருவரும், தேர்தல் விதிமுறைகளை மதிக்க வேண்டும் என்பதில் பாரபட்சம் காட்ட வேண்டாம்.
அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தங்கள் பிரசாரத்தில் இனம் மற்றும் மத உணர்வுகளையும், பிரச்சினைகளையும் தூண்ட கூடாது. தனி மனிதர் மீதான அவதூறு தாக்குதல் கூடாது. தேர்தல் பிரசாரத்தின் போது விதிமுறைகள் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
வாக்காளர்களுக்கு பரிசு போன்ற பொருட்கள் மற்றும் லஞ்சம் கொடுப்பது, விதிமுறை மீறல் ஆகும். இவற்றில் கவனமாக இருக்க வேண்டும் என்று அதில் தேர்தல் ஆணையம் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.