மே 4 முதல் என்ஜினியரிங் சீட் விண்ணப்பங்கள்
சென்னை: பொறியியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் மே 4ம் தேதி முதல் அதற்கான விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 354 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 10 ஆயிரம் இடங்களில் கடந்த ஆண்டு 70 ஆயிரம் இடங்கள் அரசு ஒதுக்கீடாக இருந்தன.
ஆனால் இந்த ஆண்டு அது குறையும் என தெரிய வந்துள்ளது. இதற்கு அரசு கட்டுப்பாட்டில் இருந்த சில பொறியியல் கல்லூரிகள் பல்கலைக்கழகமாக மாறவிருப்பதே காரணம். இதனால் அந்த கல்லூரிகளில் இருந்து கிடைக்கும் அரசு ஒதுக்கீடு கிடைக்காமல் போய்விடும். இதனால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் புதிய பொறியியல் கல்லூரிகளை திறக்க முடிவு செய்திருப்பதன் மூலம் இப்பிரச்சினை பெரிய அளவில் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவு வெளிவந்த மறுநாள் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால், இம்முறை தேர்வு முடிவுகளுக்கு முன்னதாகவே கொடுத்துவிட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான தேதியை மே 4 என அறிவித்துள்ளது. விண்ணப்ப படிவங்களை அச்சடிக்கும் பணியை விரைவில் துவக்க இருக்கிறது.
தற்போது தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை அடுத்து பொறியியல் கல்லூரிகளுக்கான மவுசு குறைந்துவிட்டதாக கருதப்படுகிறது.