களக்காட்டில் மண்ணுளி பாம்பு கடத்திய 3 பேர் கைது
களக்காடு: மதுரைக்கு வேனில் கடத்தி செல்லப்பட்ட மூன்று மண்ணுளி பாம்புகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திசையன்விளையில் இருந்து மதுரைக்கு வேனில் மண்ணுளி பாம்பு கடத்தப்படுவதாக களக்காடு புலிகள் காப்பாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து துணை இயக்குனர் பத்ரகாளி உத்தரவின் பேரில் திருக்குருங்குடி வனச்சரகர் தேவசகாயம், தலைமயைலான வனத்துறையினர் வள்ளியூர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனில் இருந்த சூட்கேசில் 3 மண்ணுளி பாம்புகள் மதுரைக்கு கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் வேனில் இருந்த 4 பேர் தப்பியோடி விட்டனர். 3 பேரை கைது செய்து வனத்துறையினர் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் சாத்தூரை சேர்ந்த அருணாச்சலம், காரைக்குடியை சேர்ந்த ராஜேந்திரன், தேவகோட்டையை சேர்ந்த மகேந்திரன், என்பது தெரியவந்தது.
திசையன்விளை அருகேயுள்ள பொட்டகுளத்தை சேர்ந்த முருகன் மற்றும் அவரது தம்பி ஐயப்பன் ஆகியோரிடம் இருந்து 3 மண்ணுளி பாம்புகளை தாங்கள் வாங்கியதாகவும், மதுரையில் உள்ள புரோக்கரிடம் பல லட்ச ரூபாய்க்கு இவற்றை விற்க கொண்டு செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் தப்பியோடிய திசையன்விளையை சேர்ந்த முருகன், அவரது தம்பி ஐயப்பன், விஜயநாராயணத்தை சேர்ந்த ராஜகோபால், வள்ளியூர் கருப்பசாமி ஆகியோரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications