சஞ்சய் தத் போட்டியிட சுப்ரீம் கோர்ட் தடை!
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், ஆயுதத் தடைச் சட்டத்தின் கீழ் சஞ்சய் தத்துக்கு ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது தடா கோர்ட்.
இதையடுத்து சஞ்சய் தத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சில நாட்கள் இருந்தார். பின்னர் ஜாமீன் கோரி அவர் உச்சநீதிமன்றத்தை அணுகினார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமீன் அளித்தது. இருப்பினும் அவரது தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லை.
இந்த நிலையில் லக்னோ தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பி்ல சஞ்சய் தத் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்தது. இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் தான் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக மும்பை கோர்ட் விதித்த தண்டனையை சஸ்பெண்ட் செய்து வைக்க வேண்டும் என்று கோரி சஞ்சய் தத் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம், ஆர்.எம். லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று பிற்பகல் விசாரித்தது.
விசாரணையின் முடிவில், மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க நாங்கள் விரும்பவில்லை. தண்டனையை நிறுத்தி வைப்பதற்கு பொருத்தமான வழக்கு அல்ல இது.
இந்த வழக்கையும், முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவின் வழக்கையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்து, சஞ்சய் தத்தின் கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.
இதனால் சஞ்சய் தத் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சஞ்சய் தத்தால் போட்டியிட முடியாவிட்டால் அவரது மனைவி மான்யதாவை போட்டியிட வைப்போம் என ஏற்கனவே அமர்சிங் கூறியுள்ளார். எனவே மான்யதாவை லக்னோவில் சமாஜ்வாடி நிறுத்தலாம் என தெரிகிறது.